இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சேரி விளையாட்டு
27
சிரங்கு சொரியுங் கை;
செம்பட்டை யானதலை;
உறங்கி விழுங் கண்கள்;
உலர்ந்த சிறு கன்னங்கள்—
குந்தியவ னுட்கார்ந்து
கூவிடவே ஓடியங்கு
வந்த சிறுமி யவள்
வரிசைதனைக் கேளீரே;
கந்தல் அவன் ஆடை,
கன்னிக் கதுவு மில்லை;
இந்த உலகில் வந்த
இயல்தோற்றம் கொண்டிருந்தாள்—
அன்புடனே கூடி அவர்
அரிதாக மண் சேர்த்துச்
சின்னச் சுவர் எழுப்பிச்
சிற்றில்ல மாக்கி யதில்
பனங் கொட்டை யொருநான்கு,
பாதையிலே கண்டெடுத்த
கனங் கொட்ட லாட மொன்று,
கண்ணாடித் துண்டிரண்டு,
ஓடையிலே போயெடுத்த
உருண்டைக்கல் லிருமூன்று,
ஒடொன்று கூழ் காய்ச்ச—
ஒரு குடும்பம் செய்கின்றார்.
மண்ணிலே வீடெடுத்து,
வாழ்க்கையையே விளையாடி,
என்னென்ன இன்பங்கள்
இளங்குஞ்சு கண்டாரோ!