பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பூவின் சிரிப்பு



தயிரை வாரி ஊற்றி ஒழுகவிட்டிருப்பதுபோல வெண்மேகம் ஒன்று அதன் மணி முடியாக விளங்குகிறது.

மேகப் பொந்துகளின் வழியே சூரியனின் பொற்கதிர்கள் புகுந்து பாய்ந்து நீல மலைச் சாரலிலே அழகிய பசும் பொன் பரப்புக்களை உண்டாக்கிக்கொண்டிருந்தன. ஆகா! திருமாவின் மார்பில் விளங்கும் கவுத்துப மணி போன்று அவைகள் விளங்குகின்றன. அவற்றில் மயங்கும் பொன் வண்ணம், நீலம், பசுமை இவற்றையெல்லாம் என்னவென்று சொல்வது!

இந்த அழகுகளையெல்லாம் காணக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மாரிக் காலத்தின் அழகே தனி. வீட்டிற்குள்ளிருந்தால் கண்டுகளிக்க முடியாது. எங்கே பார்த்தாலும் பசுமையும், புதிய இளமை புகுவதற்கு வேண்டிய அறிகுறிகளும் தென்படுகின்றன. இயற்கையில் உண்டாகும் புதுமை என்னுள்ளும் பாய்ந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

நான் இயற்கை அன்னையை மனமார வாழ்த்திவிட்டு எழுச்சியோடு திரும்பினேன்.