பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பூவின் சிரிப்பு


உடனே படுத்துவிட்டார். நான் திகைத்துப் போனேன்; என்ன பதில் கூறுவது என்று தோன்றவில்லை. குறட்டை போடுகிறவர்களுக்குத் தாங்கள் செய்யும் சப்த ஜாலங்களைப் பற்றித் தெரிகிறதே இல்லை; பிறர் சொன்னாலும் அவர்கள் நம்பமாட்டார்கள் என்று எனக்குத் தோன்றிற்று.

அதனால் அவருடன் வாதாடுவதைவிட அவர் உறங்கு முன்பே நானும் உறங்கிவிட்டால் ஒருவாறு தொல்லை தீர்ந்து விடும் என்று எண்ணி மறு பேச்சுப் பேசாமல் சாய்ந்தேன். ஆனால் அந்த மகானுபாவன் படுத்ததும் நான்கு மூச்சுத்தான் நேராக வந்தன. மறுபடியும் பழையபடி குறட்டை தொடங்கிவிட்டது.

அவரை மேலும் எழுப்புவதில் ஒரு பயனும் ஏற் படாது என்று தோன்றியதால் வேறு எங்காவது இடம் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பினேன். ஒரே இருட்டு, எங்கே பார்த்தாலும் மனிதர்கள் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். மின்சார விளக்கைப் போடுவதற்கும் இடம் தெரியவில்லை. ஓர் இரண்டடி எடுத்து வைத்ததும் யாரோ ஒருவர் காலை மிதித்து விட்டேன். அதனால் அவர் என்னவோ முணுமுணுக்கத் தொடங்கி விட்டார். இனி எச்சரிக்கையோடு நடக்கவேண்டுமென்று அடிமேல் அடி வைத்துப் பம்பிப் பம்பி நகரத் தொடங்கினேன். அந்த நிலையில் யாரோ ஒருவர் விழித்துக் கொண்டார் போலிருக்கிறது. "டேய்! யாரது? ஏன் இப்படி இருட்டிலே பதுங்குகிறாய்? கலியாண வீட்டிலே முடிச்சவிழ்க்கவா?" என்று முழங்கத் தொடங்கினார்.

மற்றவர்களும் விழித்துக்கொண்டால் நிலைமை ஆபத்தாய்விடுமே என்று சட்டென்று மறுபடியும் பழைய