பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

13

தண்ணீரில் இருந்தால் பட்டத்தைப் பறக்கவிட முடியாது என்று அவரது விளையாட்டு நண்பர்கள் கூறினார்கள்.

உடனே ஃபிராங்ளின், காற்றாடியின் நூலைக் கையில் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தார். காற்றால் உந்தப்பட்ட பட்டம், அவரை குளத்தின் எதிர் கரையிலே கொண்டுபோய் தள்ளியது. இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் எப்படி அக்கரைக்குப் போனான் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களும் அவரைப் போலவே செய்து பார்க்க விரும்பினார்கள். ஆனால், அந்த மன உறுதி அவர்களுக்கு வரவில்லை; முடியவில்லை.

இந்தப் பட்டம்விடும் பழக்கத்தால் ஃபிராங்ளின் நீந்தல் கலையில் வல்லவரானார். மற்றவர்களுக்கும் தண்ணீரில் நீந்தக் கற்றுக் கொடுக்கும் ஒரு காட்சியையே உருவாக்கினார்.

அந்நேரத்தில், பெஞ்சமின் ஃபிராங்ளினின் தமையனார் ஜேம்ஸ் என்பவர், அச்சகம் ஒன்றை நிறுவி பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு முன்கோபி. எப்போது பார்த்தாலும், சிடுசிடுக்கும் சுபாவம் கொண்ட எரிச்சல் உடையவர். அவரிடம் பெஞ்சமின் சேர்ந்து அச்சக உதவியாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

சம்பளம் ஏதும் இல்லாமல். அச்சக வேலையைக் கற்றுக் கொண்டு வந்தார். வேலை செய்த நேரம் போக, ஓய்வு நேரங்களில் பெஞ்சமினுக்கு எந்த புத்தகங்கள் அவர் கைக்கு கிடைக்கின்றதோ அதையெல்லாம் படிப்பார்.

இவ்வாறு, ஏராளமான புத்தகங்களைப் படித்ததின் பயனாக, அவரும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தனது அறிவுக்கு ஏற்றவாறு எழுதும் ஊக்கத்தைப் பெற்றார். அதன் விளைவாக, கலங்கரை விளக்கத்தின் சோக நாடகம் என்ற கவிதை ஒன்றை எழுதினார். எல்லாருடைய கவனத்தையும் அது ஈர்த்தது.