பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

ஒரு லென்சைப் பாதி பாதி அளவில் இரண்டாக வெட்டச் சொன்னார். அந்த இரண்டு லென்ஸ் துண்டுகளை தனது மூக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் இணைத்து ஒட்டி பதிக்கச் சொன்னார். அதேபோல, மற்றொரு லென்சையும் இரண்டாக வெட்டி தனது கண்ணாடி வட்டத்துக்குள் இரண்டு துண்டுகளையும் கீழும் மேலுமாக இணைக்க வைத்தார்.

இப்போது அவர் கீழ்நோக்கிப் பார்த்தார், அண்மையில் நடப்பது எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்தது. அதேபோல, மேல் நோக்கிப் பார்த்தார், தூரப் பார்வைக் காட்சிகள் எல்லாம் துல்லியமாகத் தெரிவதைக் கண்டு பலப்பல பேசியபடியே கூத்தாடினார். இரண்டு கண்ணாடிகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடும் தொல்லைகள் அகன்றது என்று மகிழ்ச்சியடைந்தார் பெஞ்சமின்.

இந்தக் காலத்திலே வாழும் நாம் எல்லாம் ஒரே மூக்குக் கண்ணாடியில் இரட்டைப் பார்வைக் கண்ணாடிகளை அணிந்து பணியாற்றி மாதாமாதம் ஊதியங்களை கை நிறையப் பெற்று ஜேபியிலே திணித்துக் கொள்கிறோமே இது யாரால்? நமது மாமேதை பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற இந்த மனிதன் கண்டுபிடித்த மூக்கு கண்ணாடியால் அல்லவா? சிந்தித்து பார்க்க வேண்டும். கண் உள்ள போதெல்லாம் நாம் அந்த மனிதப்புனிதனை மறக்க முடியுமா?

பெஞ்சமின் ஃபிராங்ளினை அடிக்கடி ஜலதோஷம் என்ற நோய் வந்து தாக்கும். இதனால் அவர் அவதிப்படும் போது ஜலதோஷம் என்ற நோயைப்பற்றிச் சிந்திப்பார். அதற்குரிய வழிகள் என்ன என்பதை ஆராய்வதைவிட, மக்களை இந்த நோய் எவ்வாறு பற்றுகிறது என்பதைத் தடுக்க அவர் வழி கண்டார்.