பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

நல்லவர்கள் சிலர் நபிகள் நாயகம் போதித்த இஸ்லாமிய நெறியில் நம்பிக்கை கொண்டு நடந்தனர். இதைக் கண்டு, குறைஷிகள் கோபமும் கொதிப்பும் கொண்டனர். மிரட்டி அடக்கி ஒடுக்க முயன்றனர். பல வகையான தீங்குகளை இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு ஏற்படுத்தினர். எண்ணற்ற இடர்கள் ஏற்பட்ட போதிலும் நபி பெருமானார் உறுதி குறையாதவர்களாக இஸ்லாத்தை எடுத்து சொல்லி வந்தார். இதனால் கலக்கமடைந்த குறைஷிகள் நபிகள் நாயகத்தைப் பெருஞ் செல்வத்துக்கு அதிபதியாகவும் மன்னராகவும் ஆக்குவதாகவும் “ஒரே இறைவன்” என்ற கொள்கையை கைவிடும்படியும் வேண்டினர். இதற்குச் சற்றும் இணங்காமல் தொடர்ந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்த நபிகள் நாயகத்தை குறைஷிகள் இறுதியில் கொல்லவும் திட்டமிட்டனர்.

சிலந்தி வளையும்
புறாக்கூடும்

அப்போது இறை கட்டளைப்படி நபிகள் நாயகமும் அவரது தோழர் அபூபக்கரும் மக்காவைவிட்டு யாருமறியாமல் வெளியேறினர். மதீனா செல்லும் வழியில் இருந்த தெளர் எனும் குகையில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது எதிரிகள் அவர்களைத் தேடி அங்கே வந்தனர். குகை வாயிலை அடைந்தபோது, அங்கே சிலந்தி வலையும் புறாக்கூடும் இருப்பதைக் கண்டனர். குகையினுள் யாரும் இருக்க முடியாது என எண்ணித் திரும்பி விட்டனர். மீண்டும் நபிகள் நாயகமும் தோழர் அபூபக்கரும் மதீனா நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இவ்வாறு பெருமானார் (சல்) மக்காவிலிருந்து மதீனா சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து தான் இஸ்லாமிய ஆண்டான ‘ஹிஜ்ரி’ தொடங்குகிறது.