பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

முன்னரே இஸ்லாமிய நெறியில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த மதீனாவாசிகள் பெருமானாரை வரவேற்று தங்களோடு தங்கவைத்துக் கொண்டனர். நாளடைவில் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்ட மக்கா வாசிகள் மதீனா வந்து சேர்ந்தனர். மதீனாவில் முதன் முதலாக தொழுகைக் கான பள்ளிவாசல் ஒன்றை நபிகள் நாயகம் கட்டினார். அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்று விடுதலை பெற்ற கறுப்பரான பிலால் அவர்கட்கு தொழுகைக்கு அழைக்கும் ‘அதான்’ எனும் பாங்கொலி எழுப்பும் மிக முக்கிய பணியைப் பெருமானார் அளித்தார்.

மதீனாவில் வேகமாக இஸ்லாம் பரவி வளர்வதைக் கண்டு வெகுண்ட மக்காவாசிகள் பெரும் படையுடன் மதீனா மீது படையெடுத்துச் சென்றனர். பத்ரு எனுமிடத்தில் நடந்த முதல் போரில் எதிரிகளுடன் பெருமானார் மிகச் சிறு படையுடன் சென்று போரிட்டார். அதில் பெருமானாருக்கே வெற்றி கிடைத்தது.

தோல்வியடைந்த மக்காக் குறைஷியர் அடுத்த ஆண்டே மீண்டும் படையெடுத்துச் சென்று ‘உஹத்’ எனுமிடத்தில் போரிட்டனர். இதில் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். இஸ்லாம் வேகமாக வளர்ந்து எங்கும் பரவியது.

இரத்தம் சிந்தா வெற்றி

நபிகள் நாயகத்தை வெற்றி கொள்ள இயலாது என்பதை நாளடைவில் குறைஷியர் உணர்ந்தனர். பெருந் தொகையினராக ஹஜ் பயணம் மேற்கொண்ட மக்கா வந்த நபிகள் நாயகத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்துத் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டனர். இவ்வாறு பெரும்போர் ஏதுமின்றி, சொட்டு இரத்தமும் சிந்தாதபடி மக்கா நகரை பெருமானாரும் முஸ்லிம்களும் வெற்றி கொண்டனர். எதிரிகளில் பலரும் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாயினர்.