பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

இதனால், பெருமானாரின் பெருமையும் புகழும் திசை யெங்கும் பரவின. இஸ்லாமிய மார்க்கத்தின் நன்னெறிகளை அறிந்துணர்ந்த மக்கள் முஸ்லிம்களாயினர். இதனால், அரேபியாவெங்கும், அடுத்துள்ள பல்வேறு நாடுகளிலும் இஸ்லாம் வலுவாக வளர்ந்து உலகப் பெரும் மார்க்கமாக நிலை பெற்றது.

தன் இறைத் தூதை முழுமைப்படுத்திய நபிகள் நாயகம், இறை வாக்குப்படி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதராவார்.

உலகுக்கோர் அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணலார் தம் அறுபத்து மூன்றாம் வயதில் மதீனாவில் மறைவெய்தினார்கள். பெருமானார் மதீனாப் பள்ளியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

பெருமானர் போதித்து, அதன்படி வாழ்ந்து காட்டிய இஸ்லாமியக் கொள்கைகள் கோட்பாடுகளில் சிலவற்றைக் காண்போம்.

இஸ்லாத்தின் உயிர்மூச்சாக அமைந்திருப்பது ஐம்பெரும் கடமைகளாகும். அவை - கலிமா எனும் இறை நம்பிக்கை, (2) தொழுகை, (3) நோன்பு, (4) ஜகாத் எனும் ஏழை வரி, (5) ஹஜ் ஆகியவைகளாகும்.

கலிமா (இறை நம்பிக்கை)

இறைவன் ஒருவனே, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு ஒருவருமில்லை; அல்லாஹ் இணை, துணை இல்லாதவன்; முஹம்மத் (சல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார். இது அரபி மொழியில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று கூறப்படும்.