பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

அவற்றின் காதும் நன்றாகக் கேட்கும். ஆனால் இம்மாதிரி பிறந்த குழந்தை உரிய பருவத்தில் ஒரு செவிட்டூமையுடன் சேர்ந்தால், அதனால் பிறக்கும் குழந்தைகளில் சில செவிட்டூமைகளாக இருக்கும்.

மேலே கூறியவாறு ஓங்கி நிற்பதும் பின்னிட்டு நிற்பதும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எலியைப் பொறுத்த வரையில் கருமை நிறம் முற்றும் ஓங்கி நிற்கிறது. முதல் கலப்பினச் சேர்க்கையில் காரெலிகளே தோன்றுகின்றன. ஆனால் ஒரே ஜாதியைச் சேர்ந்த வெள்ளைச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறக்கிற குஞ்சுகள் வெள்ளையாக இருந்தாலும் சில இறகுகள் மட்டும் சிவப்பாக இருக்கின்றன. இவ்வாறு ஓங்கி நிற்பதிலும் பலதரங்கள் உண்டு. சில முற்றும் ஓங்கி நிற்கும்; சில ஓரளவுக்குத்தான் ஓங்கி நிற்கும்.

ஆகவே, இதுவரை ஜீன்களின் மூன்று வகையான தன்மைகளைப் பார்த்தோம். சரிசமமாகக் கலப்பது ஒரு வகை. அதற்கு உதாரணம் வெள்ளை, சிவப்பு அந்தி மல்லிகைகள் சேர்ந்து வெண்சிவப்புப் பூ உண்டாவது. ஒரு தன்மை ஓங்கி நிற்பது மற்றொருவகை. காரெலி வெள்ளெலிச் சேர்க்கையில் கருமையே வெளிப்படுவது. பல பல தரங்களில் ஒரு தன்மை ஓங்கி நிற்பது மூன்றாவது வகை. வெள்ளைச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறந்த குஞ்சுகள் இதற்கு உதாரணம்.