இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாய்உடலில் தடமுலையைத்
- தழுவி அமுதம் உண்ணும்
சேயின் அருமைத் திறத்தினைப்போல்
- சிரித்துக் கண்டாய் என்னை !
ஆய்வுக்கள் ஆடியிலே
- அறிந்த புதுமை கொண்டு
தோய்ந்ததிலே புகழ்பெறல் போல்
- துணைகொண்டேன் நான் உன்னை!
கலையுணர்வு பலர்க்கிருந்தும்
- கற்பனைப்பொற்சிறகு
புலவன் மொழிக் கிணைவுறல் போல்
- புணர்ந்து கொண்டாய் என்னை !
பல மொழிகள் கற்றிருந்தும்
- பழகு தாயின் மொழிபால்
நலனுகரும் உயிர் உளம்போல்
- நானிணைத்தேன் உன்னை !
அருந்தமிழ் நூல் பலவிருந்தும்
- அரியநூ லென்றேத்தத்
திருக்குறளைத் தேடிடல் போல்
- தேடிக்கொண் டாய் என்னை !
வரும் புகழுக் கெழுதிடாத
- வண்ணப் பாடல் சிற்பம்
கருத்துணர்ந்து தருவதொப்ப
- களித்துக் கொண்டேன் உன்னை !