பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்போது நாம், சுவாசத்தின் தன்மையைப் புரிந்து கொண்டது போல, சுவாசத்தின் பல நிலைகளையும் தெரிந்து கொள்வோம். சாதாரணமாக, மனிதர்கள் சுவாசிக்கிறார்கள் என்றால், அவர்கள் செய்வது மூச்சை இழுப்பது, மூச்சை வெளியிடுவது என்ற இரண்டே நிலைதான். அதாவது காற்றை உள்ளே இழுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியே விடுவதுதான். விளையாட்டில் ஈடுபடுபவர்கள், இன்னும் ஒரு நிலையில் கூடுதலாக சுவாசிக்கிறார்கள். மூச்சிழுப்பது. மூச்சை உள்ளே அடக்கியிருப்பது. மூச்சை வெளியே விடுவது. பிராணாயாமம் செய்கிற பயிற்சியாளர்கள் மேலும் ஒரு நிலைக்கு முன்னேறிச் சென்று சுவாசத்தில் ஈடுபடுகின்றார்கள். அதாவது அவர்கள் ஆழ்ந்த சுவாசப் பயிற்சியில் இருக்க முயல்கிறார்கள். இந்த நான்கு நிலைகளை இங்கு நாம் காண்போம். 1. பூரகம் - மூச்சை உள்ளே இழுத்தல் (Inhalation) 2. கும்பகம் - மூச்சை அடக்கி இருத்தல் (Retention) 3. இரேசகம் - மூச்சை வெளியே விடுதல் (Exhalation) 1. பூரகம் : சுற்றுப்புற வெளியிலிருந்து காற்றை உள்ளே மூக்கு வழியாக உள்ளிழுத்து, அதை உடலில் உள்ள எல்லா நாடியிலும் கலக்க வைக்கும் காரியமே பூரகம் என்பதாகும். பூர்+அகம் என்று இச் சொல்லைப் பிரிக்கலாம். அகம் என்றால் உடலுள்ளே என்றும், பூர் என்றால் பூரணமான அதாவது முழுமையாக என்றும் கிடைக்கிறது. காற்றை நிறைய சுவாசித்து - அகமாகிய நுரையீரலை நிரப்புகின்ற அருமையான காரியமாகும் இது.