பக்கம்:பொன் விலங்கு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 219

அரைமணி நேரம் கழித்து வாட்ச்மேன் பிளாஸ்க்குடனும் ஒரு சீப்பு மலைப் பழத்துடனும் சத்தியமூர்த்தியைத் தேடிவந்து சேர்ந்தான்.

"பிளாஸ்கிலே பால் இருக்கு எடுத்துக்குவீங்களாம்..." என்று அவற்றைச் சத்தியமூர்த்திக்கு அருகே கொண்டு வந்து வைத்த போதும் அந்த அன்பு தன்னைத் துன்பப்படுத்துவதாகவே அவன் உணர்ந்தான். நான்கு மலைப் பழத்தையும் பாலையும் அவன் எடுத்துக் கொள்வதைத் தானே எதிரேயிருந்து பார்த்த பின்புதான் வாட்ச்மேன் அங்கிருந்து போனான்.

மறுநாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஹெட்கிளார்க்கையும் பிரின்ஸிபாலையும் சத்தியமூர்த்தி சந்திக்க நேர்ந்தது. அவர்களோடு பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே தான் அங்கு தங்கியிருப்பதோ தொடர்ந்து தங்குவதோ அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவனால் புரிந்துகொண்டு விட முடிந்தது. பூபதியின் மகள் தன்னை அங்கே அழைத்து வந்து தங்கச் செய்ததை வாட்ச்மேன் அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தபோது பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையே கல்லூரி முதல்வரிடம் ஒரே ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. மோவாய்க்கு கீழே சின்னஞ்சிறு தேன்கூடு கட்ட ஆரம்பித்திருப்பதுபோல் புல்கானின் தாடிவளர்க்கத் தொடங்கியிருந்தார்கல்லூரி முதல்வர். அவருடைய முகத்தை முன்னிலும் விகாரமாகக் காண்பிப்பதில் இந்தப் புதிய தாடி மிகமிக ஒத்துழைத்துக் கொண்டிருந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி.லேக் அவென்யூவில் நிறைய மாடி ரூம்கள் கிடைக்கும். நான் வேண்டுமானால் நம் ஹெட்கிளார்க்கிடம் சொல்லி உங்களுக்கு ஒரு ரூம் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று அவன் அங்கிருப்பது தமக்குப் பிடிக்காததை மிகவும் நாசூக்காகக் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர்.

'உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம் சார். இன்றைக்குச் சாயங்காலத்துக்குள் நானே ஒரு ரூம் பார்த்துக் கொண்டு போய்விடுவேன்' என்று அவர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து அவருக்குப் பதில் சொன்னான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/221&oldid=595261" இலிருந்து மீள்விக்கப்பட்டது