பக்கம்:பொன் விலங்கு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 223

"மாடியில் நூம்கள் வாறகைக்கு வீழப்படும்" என்று கண்ணில் தெரிந்த முதல் விளம்பரப்பலகையே தப்பும் தவறுமாகத் தெரிந்தது. றாயல் பேக்கரி என்று பெயர்ப் பலகை மாட்டிய ஒரு ரொட்டிக் கிடங்கின் கதவுகளில்தான் அந்த விளம்பரம் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் நன்றாகப் பார்த்தான்சத்தியமூர்த்தி. 'றும்கள் வாறகைக்கு வீழப்படும் என்றுதான் இருந்தது. ரொட்டிக் கடைக்காரரோ இல்லையோ மாவை அழுத்திப் பிசைகிற ஞாபகத்தில் போர்டையும் அழுத்தமாக எழுதியிருக்கிறார். ரூம்களும் அழுத்தமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ றும்கள் என்று போட்டிருக்கிறார் என வேடிக்கையாக எண்ணிக்கொண்டே விசாரிப்பதற்குப் படியேறினான் சத்தியமூர்த்தி. பாதி மலையாளமும், பாதி தமிழுமாக வந்து பதில் சொல்லியவர் தெளிவில்லாமல் ஏதோ பேசினார். கால் மணி நேரம் தொண்டைத் தண்ணீர் வற்றிய பின்பே அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. மாடியில் போய் அறையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த மாடியில் மொத்தம் மூன்று அறைகள் இருந்தன. குளியலறை முதலிய வசதிகள் எல்லாம் மூன்று அறைகளுக்கும் பொதுவாகவே இருந்தன. மாடியின் பின்புறமாகக் கீழே ஏராளமான சண்பக மரங்கள் காடு மண்டிக் கிடந்ததனால் அவற்றின் கிளைகள் பின் பக்கத்து வராந்தாவில் குளியலறைக்கு அருகே வந்து கொஞ்சிக் கொண்டிருந்தன. சண்பக மணமும் ரொட்டிக்கடை நறுமணமும் சேர்ந்து மாடியில் வந்து தவிர்க்க முடியாமல் பரவிக் கொண்டிருந்தன. மாடியின் பின் பக்கத்து வராந்தாவிலிருந்து பார்த்தால் எங்கிருந்தோ வேகமாக இறங்கி வந்து கொண்டிருப்பது போல் மிக அருகே நீலமலைகள் தெரிந்தன. ஆளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறாற் போல் குளிர்ந்த காற்று பாய்ந்து பாய்ந்து வீசியது.

அறைக்குள் போவதற்கு முன் அவசரமாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாலும் வராந்தாவுக்கு அப்பால் ஏதோ அழகாக நிறைந்து கிடப்பதை மீண்டும் ஒருமுறை நோக்கவோ புரிந்து கொள்ளவோ முடியும். அவசரமாயினும் ஞாபகத்திலும் பார்வையிலும் தாமாகவே வந்து பதிந்து கொள்கிற நுணுக்கமான அழகுகள் அவை. வாடகை முதலிய விவரங்களைக் கூறுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/225&oldid=595269" இலிருந்து மீள்விக்கப்பட்டது