பக்கம்:பொன் விலங்கு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 239

சத்தியமூர்த்தியும் கவனித்தான். மறுபடியும் இரண்டு மூன்று முறை அதேபோல ஆனால் உடனிருந்த தோழிகளின் தொகையை அதிகமாக்கிக் கொண்டு அந்தப் பக்கமாக வருவதும் போவது மாயிருந்தாள். புதிய தமிழ் விரிவுரையாளர் மிகவும் நல்லவர் என்று இந்தப் பேதைப்பெண் தன் தோழிகளைக் கூட்டிக் கொணர்ந்து என்னைக் காண்பித்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறாளோ? என்று நினைத்தான் அவன். அன்று மாலை ஐந்தரை மணிக்கு நிர்வாகி பூபதி அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் கல்லூரி ஆசிரியர்களையும் அலுவலர்களையும் தேநீர் விருந்துக்கு அழைக்கும் சர்க்குலர் ஒன்று வந்தது. அது ஒரு கோ- எஜூகேஷன் (ஆண்களும் பெண்களும் சேர்ந்து கற்கும்) கல்லூரி ஆகையால் ஆசிரியர்களாகவும் விரிவுரை யாளர்களாகவும் சில பெண்மணிகளும் கூட இருந்தார்கள். தமிழ்ப் பகுதியில் மிஸ் வகுளாம்பிகை என்று ஒரு பெண் விரிவுரையாளராக இருந்தாள். புரொபஸர் சார். புரொபஸர் சார் என்று காசிலிங்கனாரைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் அந்த இளம் ஆசிரியை. வகுளம்.யூ n. என்று ஆரம்பித்துக்காசிலிங்கனாரும் அவளிடம் பேசுவதற்காகவே உண்டாக்கிக் கொண்டது போன்ற வாஞ்சையான குரலில் அடிக்கடி சிரத்தையாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார், அல்லது பேச முயன்று கொண்டிருந்தார். அங்கு வந்து சேர்ந்த முதல் விநாடியிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் பார்வையிலும் எதையும் தப்ப விட்டு விடாமல் அந்தக் கல்லூரியையும் அங்குள்ள மனிதர்களையும் சற்றுப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி, தோற்றத்தில் அழகும் புத்தியில் திறமையும் உள்ள இளம் ஆசிரியர்கள் மாணவர்களைக் கவர்ந்து வசப்படுத்திக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படுகிற ஒரு முதல்வர், எல்லா வேளையிலும் இராகுகாலத்தைத் தவிர வேறெதையும் அக்கறையோடு தேடிப் பார்க்க விரும்பாத ஒரு ஹெட்கிளார்க், தமிழை ஆங்கிலத்தைப் போலவும், ஆங்கிலத்தைத் தமிழைப் போலவும் உச்சரிக்கக்கூடிய ஒரு தமிழ்ப் பேராசிரியர், அடிக்கடி அடக்க முடியாமலும், தவிர்க்க முடியாமலும் ஏதோ புதுமையைப் பார்க்கிறவர்களைப் போல் தன் பக்கம் திரும்பிப் பார்க்கிற சக ஆசிரியர்கள் எல்லாரையும் மனத்தில் அளந்து நிறுத்திக் கொண்டிருந்தான் அவன். இடைவேளைக்குப் பின் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/241&oldid=595305" இலிருந்து மீள்விக்கப்பட்டது