634 பொன் விலங்கு
நடந்திராவிட்டால் இப்படி மணக்கோலத்தில் புகைப்படம் எடுத்து மாட்டுவதற்கு வேறு சந்தர்ப்பம் ஏது? ஊர் உலகத்தில் தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொள்வார்களே என்று பயந்து இந்த ஜமீன்தார் இவளை ஆசைக்கிழத்தியாக விரும்பிக் காதும் காதும் வைத்தாற்போல் இரகசியமாக மணந்து கொண்டிருக்கிறாற்போல் இருக்கிறது. இதை என்னிடம் மூடி மறைத்து ஏமாற்றிக் கொண்டு, 'பட்டுப் புடவைக் கடையில் ஜமீன்தாரையும் என்னையும் சேர்த்துப் பார்த்ததனால் என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள் என்று எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தனுப்புகிறாளே இந்தப் பழிகாரி என் கையில் இந்த மோதிரத்தை அணிவித்துவிட்டு, மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்குச் சமர்ப்பணமாகும் பூவைப் போல் தானாகவே உங்களிடம் சேர்ந்தவள்’ என்று இவள் என்னிடம் உருகிய உருக்கமெல்லாம் எவ்வளவு பெரிய துரோக நாடகம்? இந்த வீட்டில் நீங்கள் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று காத்துக் கிடக்கிறது என்று கண்கலங்கிட இவள் முன்பு என்னிடம் கூறியிருந்த வாக்கியத்தையும் அதன் உறுதியையும் காற்றில் பறக்க விட்டு விட்டாளே? என்றெல்லாம் வெறுப்போடு எண்ணியபோது அவள் தன்னைக் கைப்பற்றி அணிவித்த அந்த நீலக்கல் மோதிரத்தை உடனே கைவிரலிலிருந்து கழற்றித் தலையைச் சுற்றித் துர எறிந்து விடவேண்டும் போல் அருவருப்பாயிருந்தது அவனுக்கு அருகிலிருந்த நண்பன் குமரப்பனும் இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் சக பிரயாணிகளும் காணும்படி அந்த மோதிரத்தைக் கழற்றி எறியக்கூடாது என்பதற்காக அந்தக் கம்பார்ட்மென்டின் ஒரு
கோடியிலிருந்த குளியலறைக்குச் சென்றான் அவன். குளியலறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு அந்த மோதிரத்தை விரலிலிருந்து கழற்ற முயன்றபோது அது விரலோடு விரலாக இறுகிப் போயிருந்ததினால் கழற்ற வரவில்லை. ஒடும் இரயிலில் குளியலறைக்குள் அங்கும் இங்குமாகத் தள்ளாடியதும் மோதிர விரலில் இரத்தம் குழம்பிக் கன்றிச் சிவந்ததும் தவிர அவனுடைய