பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ⚫ போதி மாதவன்

‘கலப்புற்ற பொருள்கள் பிரிந்துவிடும்; நாம் பிறப்பு, பிணி, முதுமை, மரணங்களிலிருந்து தப்பவே முடியாமற் போகும். இது எப்படி முடிவான விடுதலையாகும்?’

காலாமர் அநுபவ பூர்வமாக எவ்வளவு அறிந்திருந்தாரோ, அந்த அளவுக்குக் கௌதமரும் அறிந்து கொண்டார். அவர் மூலம் ஏழு சமாபத்திகளையே அறிந்து கொள்ள முடிந்தது. அவை அனைத்தும் வெகுவிரைவிலே கைவரப் பெற்றுக் கௌதமர் அவற்றிலே நிலைத்து நின்றார். பிறகு குருவை அடைந்து, ‘காலாம நண்பரே, தாங்கள் தங்கள் உள்ளுணர்வு அறிவினால் தெரிந்து நிலைத்து நிற்கும் தங்கள் சித்தாந்தத்தின் தன்மை இவ்வளவுதானா!’ என்று வினவினார். காலாமரும், ‘ஆம், இவ்வளவுதான்!’ என்றார்.

கௌதமர் தமக்கும் அந்தச் சித்தாந்தம் முழுதும் அநுபவத்தில் கைவந்து விட்டதாகக் கூறினார். காலாமர் மிக்க மகிழ்ச்சியடைந்து, ‘நான் அறிந்த சித்தாந்தத்தை நீர் அறிவீர்; நீர் அறிந்த சித்தாந்தத்தை நான் அறிவேன். என்னைப் போலவே நீர் இருக்கிறீர்; உம்மைப் போலவே நான் இருக்கிறேன். எனவே, நண்பரே, நாம் இருவரும் சேர்ந்து நம் சீடர்களாகிய முனிவர்களுக்குத் தலைவர்களாக இருப்போம்!’ என்று கூறினார். சீடராக வந்தவரை அவர் தமக்குச் சமமான குருவாக ஏற்றுக் கொண்டார்.

ஆனால் கௌதமர் அதற்கு இணங்கவில்லை. ‘இந்தச் சித்தாந்தம் என்னைத் துறவு வழியில் செலுத்தி, ஏகாந்த நிலையில் மனத்திற்கு அமைதியைக் கொடுத்து, உள்ளுணர்வைப் பெருக்கி, ஞானத்தை அளித்து, நிர்வாண முத்திக்குச் செலுத்தவில்லை. வெறும் ஏழு சமாபத்திகளையே அளிக்கின்றது!’ என்று கருதி, அவர் திருப்தி கொள்ளாமல், சத்தியத்தை நாடி வெளியேறிச் செல்ல விடை கொண்டார்.