பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 ⚫ போதி மாதவன்

திருஷ்டியால் அவருக்கு எல்லாம் விளக்கமாகத் தெரிந்தன. இவையெல்லாம் நள்ளிரவிலே ஏற்பட்ட அநுபவங்கள்.

நான்கு வாய்மைகள்

பின்னர் பிறவிக்குக் காரணமான குற்றங்களை நீக்கும் வழியைப் பற்றிச் சிந்தனை செய்தார். அப்போது பின் கண்ட நான்கு சிறந்த வாய்மைகளும் அவருக்குத் தெளிவாக விளங்கின: துக்கம், துக்க உற்பத்தி, துக்க நீக்கம், துக்க நீக்க வழி.

முதலாவது வாய்மை துக்கம் நிலைத்திருத்தல். பிறப்பு துக்கம், வளர்ச்சி துக்கம், பிணி துக்கம், மரண துக்கம். நாம் விரும்பாதவைகளோடு இணக்கம் ஏற்படுவது துக்கம். நாம் விரும்பியவற்றிலிருந்து விலக நேர்வது அதிகத் துக்கம். பெறமுடியாதவற்றில் ஏற்படும் ஆசை பெருந்துக்கம்.

இரண்டாவது வாய்மை துக்க உற்பத்தி, துக்கத்தின் காரணம் அவா. நம்மைச் சூழ்ந்துள்ள உலகம் புலன்களின் உணர்ச்சிகளைத் தாக்கி ஆசையாகிய வேட்கையை எழுப்புகின்றது. ஆசை உடனே நிறைவேற வேண்டும் என்ற ஆத்திரம் எழுகின்றது. ‘நான்’ என்ற உணர்வோடு இன்புற்று வாழ விருப்பம் ஏற்படுவதால், துக்க வலையில் வீழ நேருகின்றது. இன்பங்களே தூண்டில்கள்; முடிவு துன்பமே.

மூன்றாவது வாய்மை துக்க நீக்கம். ‘நான்’ என்ற அகங்காரத்தை வென்றவனுக்கு ஆசை அற்றுவிடும். எதிலும் அவா இல்லாமற் போகையில் ஆசைத் தீ பற்றிக் கொண்டு எரிவதற்கு ஒரு பொருளும் அகப்படாமற் போகிறது. இவ்வாறு ஆசை அவிந்துபோகும்.