230 ⚫ போதி மாதவன்
புத்த தரிசனம்
நகரின் கோட்டையைத் தாண்டி வெளியே செல்கையில், திடீரென்று தாரகைகளின் ஒளியும் மங்கி விட்டன. முன்னும், பின்னும், நாலு புறத்திலும், ஒரே இருட்பிழம்பாக இருந்தது. கங்குலில் தோன்றும் கலவரங்கள் அவர் உள்ளத்தைக் கலக்கின; மயிர்கூச் செறிந்து அவர் திகிலுடன் நின்று விட்டார்.
அப்போது அசரீரியின் இனிய ஒலி ஒன்று கேட்டது.
‘நாலு யானைகள், நூறு குதிரைகள், நாலு காளைகள் பூட்டிய நூறு தேர்கள், நகைகள் அணிந்த நூறாயிரம் நங்கையர் ஆகிய அனைத்தையும் ஒருவன் பெறுவதாக வைத்துக் கொண்டால், இலட்சியத்தை அடையும் பாதை யில் ஓர் அடி எடுத்து வைப்பதில் கால் பகுதியில் கால் பகுதிக்குக் கூட அவை அனைத்தும் இணையாகா!......... தொடர்ந்து நடந்து முன்னே செல்வீராக!’
அநாத பிண்டிகர் மன உறுதி கொண்டு மேலும் நடக்கலானார். உடனே எங்கணும் ஒளி உண்டாயிற்று, அவரும் விரைவில் வேணு வனத்தை அடைந்தார்.
பொருள் வள்ளலும் அருள் வள்ளலும்
பகவர் பொழுது விடியுமுன்பே எழுந்திருந்து, திறந்த வெளியிலே உலாவிக் கொண்டிருந்தார் சாந்தி தவழும் சோலையிலே சாந்தி நிறைந்த உள்ளத்துடன் நடந்த வண்ணம் ஐயன் தொலைவில் வரும் வள்ளலைக் கண்டு, அருகே தமக்கென்று அமைக்கப்பெற்றிருந்த ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டார். அநாத பிண்டிகரும் அருகே வந்தார். ‘வருக, சுதத்தா! வருக!’ என்று அண்ணல் அன்போடு அழைத்தார்.