பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநாத பிண்டிகர் ⚫ 231

அண்ணல் தமது இயற்பெயரை அறிந்து கூறியதைக் கண்டு அநாத பிண்டிகர் ஆச்சரியமடைந்தார். உடமே தமது நெடிய உருவத்தை நிலத்தின் மீது கிடத்தி வணங்கி யெழுந்து, ‘ஐய, கங்குற்பொழுது இனிதாய்க் கழிந்ததோ?’ என்று குசலம் விசாரித்தார்.

‘ஞானி எப்போதுமே இன்புற்றிருக்கிறான். ஞானி! இருள் வழியை நீக்கி ஒளி வழியில் செல்வன். வீட்டை விட்டு, விரும்புதற்கு அரிய விவேகத்தை நாடித் துறவு வாழ்க்கையின் ஏகாந்த இன்பத்தில் அவன் திளைத்துக் கொண்டிருப்பான். அவள் உள்ளம் வேதனை நீங்கி எப்போதும் சாந்தி பெற்றுத் தழைத்து நிற்கின்றது!’ என்று பகவர் பதிலுரைத்தார்.

பகவர் அவருடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். தானம், தருமம், சுவர்க்கம், ஒழுக்கம், துறவு. ஆசாபாசங்கள் முதலிய பல விஷயங்களைப் பற்றித் தேன் மழை பொழிவது போல அவர் பொழிந்து கொண்டிருந்த இன்சொற்களைச் சிராவஸ்தி வள்ளல் இன்னமுது என்று பருகிக் கொண்டிருந்தார்.

‘புத்தர் என்ற பெயரைக் கேட்டதும் நீ உள்ளம் களித்து ஓடி வந்தாய். ஏனெனில், முந்திய பிறவிகளிலே நீ செய்த புண்ணியத்தின் பலனால். உன் உள்ளம் பண்பட்டிருக்கிறது. உள்ளே பணிவு, வெளியே வரையில்லா மல் அள்ளக் கொடுக்கும் கொடை–இவற்றால் உன்னிடம் தருமம் பெருகி நிலைத்திருக்கின்றது!’ என்று புத்தர் பாராட்டினார்.

அநாத பிண்டிகர் தம் வரலாற்றையும் அவருக்கு எடுத்துரைத்தார்.. சிராவஸ்தி பற்றியும், பார்த்திபர் பிரசேனஜித்தைப் பற்றியும், ஏழைசளுக்குத் தாம் செய்து வரும் ஊழியம் பற்றியும் அவர் கூறினார்.