பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 ⚫ போதி மாதவன்

பின்னர் அநாத பிண்டிகர், போதிநாதரும், அடியார் திருக்கூட்டமும் மறுநாள் தாம் அளிக்கும் அமுதை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார்

பகவரும் மௌனத்தால் தமது இசைவை உணர்த்திய பின், அவர் விடைபெற்றுச் சென்றார்.

அன்று பகலில் அண்ணலுக்கும் அடியார்களுக்கும் விருந்தளித்த இராஜகிருக வள்ளல் தமது சகோதரியின் கணவரைப் பார்த்து, அவர் வந்த இடத்தில் என்ன செய்ய முடியும் என்றும், தாமே மறுநாள் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்வதாயும் கூறினார். அநாத பிண்டிகர் தாமே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார்.

அதேபோல மறு நாள் விருந்து முறையாக ஏற்பாடாயிற்று. எல்லாம் தயாராயிருப்பதாகப் பகவருக்கும் காலையில் செய்தி கூறப்பட்டது. பகவரும் துவராடை பூண்டு, பிக்குக்கள் புடை சூழ, இராஜகிருகத்துக் கோடீச்வரரின் மாளிகைக்கு விஜயம் செய்தார். அநாத பிண்டிகர் அவர்களை அன்புடன் வரவேற்று, அனைவருக்கும் தாமே தம் கரங்களால் உணவு பரிமாறினார். எல்லோரும் அமுது செய்தபின், அவர் மருளறுத்த மாதவர் பக்கத்திலே போய் அமர்ந்து கொண்டு, ‘வருகிற மாரிக்காலத்தை ஐயன் சங்கத்தாருடன் சிராவஸ்தியிலே கழிக்க அருள் புரிய முடியுமா?’ என்று கேட்டார்.

பகவர், ‘ததாகதர்கள் தனிமையான இடத்தையே விரும்புவார்கள்!’ என்றார்; ‘அங்கே விகாரை எதுவும் இருக்கிறதா?’ என்றும் கேட்டார்.

அநாத பிண்டிகர் : இல்லையே, பெரும!