பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிமூன்றாம் இயல்

கபிலையம்பதி

மாற்றரும் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம் !......

–மணிமேகலை

‘மத யானையின் முதுகிலே அமர்ந்து இன்புறக் கூடிய செல்வமும், இவ்வரசும் நான் வேண்டேன்’ என்று வெறுத்துச் சென்ற சித்தார்த்தர், புத்தராகி, மீண்டும் கபிலையம்பதிக்கு வருகிறார் என்ற செய்தியை அறிந்து, அந்நகர மக்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தனர். வீதிகளிலே வெண்மணல் விரித்தனர்; வீடுதோறும் மகர தோரணங்கள் - கட்டினர்; மாடங்களிலே மணிக்கொடிகளைப் பறக்க விட்டனர். வயல்களிலும் வயற்புறங்களிலுமுள்ள வாழைகள், கமுகுகள் எல்லாம் வீதிகளுக்கு வந்து விட்டன. தங்கப் பூண் கட்டிய தந்தங்களுடனும், வெள்ளி அம்பாரிகளுடனும் யானைகள் தயாராக நின்றன. பிரபுக்களும் அதிகாரிகளும் ஆங்காங்கே நின்று வரவேற்கக் காத்திருந்தனர். கீதவாத்தியங்கள் பல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

நகருக்கு அருகே அமைந்திருந்த அரசருடைய நெடிய சோலையான நியக்குரோத வனத்திலே[1] பெருந்தவ முனிவர் தங்குவதற்கு ஏற்ற அழகிய மண்டபம் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. அச்சோலையிலே பசுமையான மரங்களும் மலர்ச் செடிகளும், கொடிகளும் மிகுதியாக இருந்தன.


  1. நியக்குரோத வனம்– ஆலமரங்கள் அடர்ந்த சோலை.