பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 ⚫ போதி மாதவன்

‘பொய், புறங்கூறல், இன்னாச் சொல், வீண் பேச்சு முதலியவற்றை ஒழித்து, வாய்மை, அடக்கம், இன்சொல், பயனுள்ள அற ஆராய்ச்சி முதலிய நற் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்திலே அரசர் கொலுவீற்றிருக்கிறார். அந்தக் கொலு மண்ட பத்தின் வாயில் உங்களுடைய வாய். வாயில் கண்ட வார்த்தைகள் நுழைந்துவிடாமல் காத்துக் கொள்ளுங்கள்; அமைதி, அழகு, கௌரவம் ஆகியவற்றில் ஊறிய சொற்களையே வாய் பழகிக் கொள்ள வேண்டும், இதுவே நல்வாய்மை!

‘உயிர்க்கொலை, களவு, காமம், பொறாமை, வெகுளி, முதலிய தீமைகளை விலக்கி, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் எதைச் செய்தாலும் அச் செயல் முன்னால் உள்ளத்தில் ஊன்றி வளரும் ஒரு தீமையைக் களையவேண்டும், அல்லது ஒரு நன்னம முளை விட்டு வளரும்படி செய்ய வேண்டும். இதுவே நற்செய்கை!

‘வாழ்வுக்கு வேண்டிய பொருள்களை நீதியான முறையிலே உழைத்துப் பெறவேண்டும். இதுவே நல் வாழ்க்கை !

‘தீய எண்ணங்களை அழித்து நல்லெண் ணங்களை வளர்க்க இடைவிடாமல் எப்போதும் முயற்சி செய்து கொண்டேயிருக்கவேண்டும், இதுவே நல்லூக்கம்!

‘அறிவினால் கண்ட வாய்மைகளைப் போற்றி எப்போதும் கருத்தோடு இருக்கவேண்டும். கவலையின்றிச் சிறிது கண்ணை மூடினாலும், தீமைகள் உள்ளத்தில் புகுந்துவிடும். கருத்துடைமையே நற்கடைப்பிடி!