பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 ⚫ போதி மாதவன்

போதம் விளைக்கும் இப்பொன்மொழிகளைக் கேட்ட நந்தன் உற்சாகமான உரத்த குரலில், ‘நல்லது!’ என் றான்; ஆனால் அவன் உள்ளம் தளர்ந்திருந்தது.

பெருமான் ஆனந்தரை அழைத்து, ‘ஆனந்தா! நந்தன் உளச்சாந்தி பெறுவதற்காக அவனுக்குக் கஷாயமளித்துச் சங்கத்தில் சேர்த்துக் கொள்!’ என்று கூறினார்.

நந்தன் ஆனந்தருடன் போகும் வழியில், ‘நான் பிக்குவாக விரும்பவில்லை!’ என்றான். உடனே ஆனந்தர் அவன் கருத்தைப் பகவரிடம் வந்து கூறினார்.

புத்தர் மீண்டும் நந்தனுக்கு உபதேசிக்கலானார் :

‘உன் தமையனாராகிய நானே துறவியாகி விட்டேன்! உன் சகோதரர்கள் பலரும் என்னைப் பின்பற்றி வந்துவிட்டனர்! நம்முடைய அரச வமிசத்தில் பூர்வத்தில் எத்தனையோ மன்னர்கள் ஆசாபாசங்களை அறுத்துக் கொண்டு மனச் சாந்தி பெறுவதற்காகத் துறவு பூண்டிருந்தார்கள் கொள்ளை நோய் பரவியுள்ள நாட்டிலே உயிரில் ஆசையுள்ளவர் எவரும் தங்கியிருக்க மாட்டார். தான் சாக வேண்டும் என்று கருதுவோனே தங்கியிருப்பான். அவனைப் போல நாமும் நடந்து கொள்ளலாமா? தீப்பற்றி எரியும் வீட்டில் அமைதியுடன் தூங்க முடியுமா? நோய், வயோதிகம் என்னும் கொழுந்துகளுடன் எரியும் மரணத் தீயால் வெந்து கொண்டிருக்கும் உலகை விட்டு வர உனக்கு மனமில்லையா? தூக்கு மேடைக்குச் செல்லும் மனிதன் குடிவெறியில் ஆனந்தக் கூத்தாடி ஆர்ப்பரிப்பது போல, மரண வலைக்குள் சிக்கிய மனிதன் அதை உணராமலிருந்தால் வருந்தத்தக்க விஷயமேயாகும்.