பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384 ⚫ போதி மாதவன்

மேலும் அவர் கூறியதாவது ;

‘பின் எதற்காகச் சங்க சம்பந்தமான எந்த விஷயத்தைப்பற்றியும் ததாகதர் போதனைகள் கூறி வைக்க வேண்டும்?

‘ஓ ஆனந்தா! எனக்கும் வயதாகின்றது; இப்போது முதுமையடைந்து விட்டேன்; எனது யாத்திரையின் முடிவு நெருங்கியுள்ளது; நான் வாழ வேண்டிய நாட்கள் வாழ்ந்தாகி விட்டது; எனக்கு எண்பதாவது வயது நிறைகின்றது.

‘தேய்ந்து ஆடிப்போன வண்டியை அதிகக் கவனத்துடன் பாதுகாத்தால்தான் அதை ஓடும்படி செய்யலாம்; அதுபோலவே ததாகதருடைய உடலையும் அதிகக் கவனத்துடன் பாதுகாத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கும்படி செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன், ஆனந்தா!

‘ஆனந்தா! வெளியேயுள்ள பொருள் எதையும் பர் றிக் கவனியாமல், (புலன்களின் மூலம் ஏற்படும்) உணர்ச்சி களையும் விட்டு, உலகப் பொருள் எதிலும் சம்பந்த மில்லாத தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது தான், ததாகதர் நிம்மதியாக இருக்கிறார்.’

சங்கத்தின் சார்பாக ஆனந்தரை முன்னிலையில் வைத்துக்கொண்டு பெருமான் தொடர்ந்து பேசலானார். மெய்ப் பொருளில் நாட்டமுடையோர் யாவர்க்கும். எக்காலத்தும், உறுதிபயக்கும் வண்ணம் அவர் கூறிய திருவாசகங்கள் வருமாறு:

‘ஆதலால், ஆனந்தா, உங்களுக்கு நீங்களே தீபங்களாயிருங்கள். உங்களுக்கு நீங்களே அடைக்கலமாயிருங்கள். வெளியில் எத்தகைய அடைக் கலத்தையும் நாடாதீர்கள்!