பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 79

சித்தார்த்தரின் உள்ளத்தில் திடீரென்று உவகை மலர்ந்தது. ‘சத்தியத்தை நாடுவதற்கு இதுவே தருணம்; பூரணமான மெய்ஞ்ஞானம் அடைவதைத் தடைசெய்து நிற்கும் எல்லாப் பாசங்களையும் அறுத்துக் கொள்ள இதுவே தருணம்; ஆரணியத்திலே திரிந்து, ஐயமெடுத்து அரும்பசியை ஆற்றிக் கொண்டு, விடுதலை மார்க்கத்தை அடைவதற்கு இதுவே தருணம்!’ என்று அவர் கூறிக் கொண்டார்.

துறவி வேடம் பூண்டு நின்ற தேவரும், ‘ஆம், உண்மையை நாடுவதற்கு இதுவே தருணம். சித்தார்த்த! வெளியே புறப்பட்டு உன் இலட்சியத்தை நிறைவேற்று. நீ புத்தராகப் போகும் போதிசத்துவன், உலகில் அறிவொளியைப் பரப்ப வேண்டியவன் நீ! நீயே ததாகதன், பூரண மனிதன், தருமம் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் ராஜனாக விளங்க வேண்டியவன் நீ! நீயே பகவன், உலகைக் காப்பாற்றத் தோன்றிய இரட்சகன் நீ! எந்தக் காலத்திலும் கதிரவன் தன் வழியிலேயே சென்று கொண்டிருத்தல். போல, நீதி மார்க்கத்திலேயே சென்று கொண்டிருந்தால், நீ புத்தனாவாய்; இடைவிடாமல் உன் கடமையை உறுதியுடன் செய்து வந்தால், நீ தேடுவதை அடைந்தே தீருவாய்’ என்று கூறினார்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் விரைவாக வானத்திலே பறந்து மறைந்து விட்டார். சித்தார்த்தரின் இதயத்தில் அமைதி நிலைத்தது. தருமம் என்பதன் பொருள் முழுதும் அவருக்கு விளக்கமாயிற்று. அவர் முகம் நிறைமதி போல் சுடர் விட்டது. குகைபிலிருந்து மிருகேந்திரன் அறிவுற்றுப் பிடரி மயிர் பொங்கி, ஒளி வீசும் கண்களுடன் வெளியேறி நடப்பதுபோல், அவர் அங்கிருந்து எழுந்து சென்று தோழர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்தார். மீண்டும் தமது பரியின்மீது அமர்ந்து நகரை நோக்கிச் சென்றார்.