பக்கம்:மகான் குரு நானக்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மகான் குருநானக்


அவனிடம் கேட்டாலும், தான் கண்டவற்றை அல்லது கேட்டவற்றை அப்படியே திருப்பிக் கூறிடும் தனித் தகுதி பெற்ற திறமையாளனாக இருந்தான் அந்த பாலா.

இந்த தனி ஆற்றல், தெய்வீகத் திறன் அவனுக்கு வந்தது எப்படி? மர்தானாவுக்கு தனது குரு அருளாசியால் எவ்வாறு ரூபாய் இசைக் கருவியை மீட்டிடும் சக்தி வந்ததோ, அதே போன்ற சக்திதான் இந்த பாலாவுக்கும் சத்குரு அருளால் வந்ததெனலாம். சரி, இந்த சக்தியால் சத்குரு நானக்குக்கு என்ன பயன்?

சத்குரு நானக் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றாரோ, எந்தெந்த சம்பவங்களில் கலந்து கொண்டாரோ, என்னென்ன நிகழ்ச்சிகளை செய்து காட்டினாரோ, எங்கெங்கே என்னென்ன பாடல்களைப் பாடினாரோ, எத்தகைய போதனைகளை ஆற்றினாரோ அவற்றை எல்லாம் ஒரு வரிகூட விடாமல், குன்றாமல், மிகாமல் உண்மையை உள்ளவாரே, அப்படியே எப்போதும், யார் கேட்டாலும், நடந்த சம்பவக் காட்சிகளை நடந்தது நடந்தபடியே ஒப்புவிக்கும் மன ஆற்றலைப் பெற்றிருந்தான் பாலா. அவற்றைப் பிற்கால வரலாற்றாசிரியர்கள் அல்லது எழுத்தாளர்கள் அப்படியே எழுதிக் கொண்டார்கள். சத்குரு நானக்கின்போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது எல்லாமே. பாலாவின் மனப்பாடத் திறனால் கிடைத்தவையே தவிர, சத்குரு நானக் அவர்களால் எழுதி வைக்கப்பட்டவை என்று ஒன்று கூட இல்லை.

சத்குரு நானக் என்ற ஞானியாவது பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பன்னூறாண்டு களுக்கு முன்பே வாழ்ந்தவர்களது ஞானப் புதையல்கள் எல்லாம், அவர்களுக்குப் பின்னே வந்த பேரறிவாளர்களின் பேராற்றல்களால் தொகுக்கப்பட்டனவே தவிர, அந்த ஞானப் பெருமகன்களால் எழுதி வைக்கப்பட்ட அறிவுக் கருவூலங்களல்ல!

உண்மையை நிலை நாட்டிட நச்சுக் கோப்பையை ஏந்திக் குடித்த அறிவு மன்னன் சாக்ரடீஸ் பேசிய அறிவாய்வுரைகளை எல்லாம் பிளேட்டோ என்ற பேரறிவுச் சக்கரவர்த்திதான் எழுதி வைத்தான்!