பக்கம்:மகான் குரு நானக்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

83


அந்தச் சோதனைகளிலே சத்குரு வெற்றி பெற்றார். ஆனாலும் ராஜாவுக்கு ஒரு மன நெருடல் குரு தேவரைப் போய் அவநம்பிக்கைப் பட்டோமே என்பதுதான் அது.

குருநானக்கை வழியனுப்பும் விழாவில் பாராட்டிப் பேசிய ராஜா சிவநாத், மகான், யோகி குருநானக் ஓர் அவதார புருஷர் ஆவார் என்று பேசி, தான் அவர்மீது அவநம்பிக்கை வைத்தது தவறு. ஏனென்றால் போலிச் சாமியார்கள் அதிகமாகப் பெருகி ராமேஸ்வரம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி ஏமாற்றுவதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான் சத்குரு போலிச் சாமியாரோ என்ற ஓர் ஐயம் எனக்கு ஏற்பட்டு விட்டது.

சத்குரு அவர்கள் இந்த பாபியை மன்னிக்க வேண்டும் என்று அந்த விழாவின் மக்கள் மத்தியிலே ராஜா கேட்டுக் கொண்டார். அதற்கு சத்குரு, 'அன்பின் வடிவான மெய்யன்பரே, உமது நினைப்பில் தவற்றில்லை. உண்மைதான். நீங்கள் இறைஞான வழிபாடுகளிலே ஒரு புதுமையைப் புகுத்தி மறுமலர்ச்சி கண்டு நீண்ட நாள் வாழ வேண்டும்’ என்று குருநானக் ராஜாவை வாழ்த்தி அருளாசி வழங்கினார்.

சங்கல் தீபம் என்ற அந்தத் தீவிலே இருந்து சத்குரு கன்னியாகுமரி சென்றார். முக்கடல் சங்கமத்தின் இயற்கை அமைப்பின் எழிலை நீண்ட நேரமாக ரசித்தபடியே குமரிக் கடலோரக் கரையிலே மெய்மறந்து நின்றார்.

முக்கடல் குமரியின் சங்கமத்திலே இருந்து சத்குரு நேராக திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்றார். அப்போது ராணி அதை ஆட்சி செய்து கொண்டிருந்தார். குருநானக் ராணியைச் சந்தித்து உபதேச உரை நிகழ்த்திய பின்பு, ஆன்மீக நெறிகளில் அரசியாருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் சிலவற்றை நீக்கினார்.

சத்குரு அங்கே இருந்து கண்ணன் பிறந்த இடமான பிருந்தாவனம் சென்றார். பிறகு, தமது சீடர்களுடன் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார். யமுனை நதிக்கரையிலே அப்போது புதுதாகக் கட்டப்பட்டிருந்த குருத்துவாரம் திருக்கோவிலைப் பார்த்து பரவசப்பட்டார். சில நாட்கள் அவர் தில்லி மாநகரிலே தங்கிவிட்டுப் பிறகு, தனது இருப்பிடமான கர்தர்பூர் சென்றார்.