பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

101


துருபதன் திடுக்கிட்டு மனங் கலங்கினான். அப்போது வியாச முனிவர் அங்கே வந்து துருபதனுக்கு ஆறுதல் கூறித் ‘திரெளபதியின் பழவினைப்படி அவள் ஐவரை மணக்க வேண்டியிருப்பதை’ -விளக்கினார். வியாசர் கூறிய விளக்கத்தைக் கேட்ட பின் துருபத மன்னனும் ஒருவாறு மனந்தேறித் திரெளபதியை ஐவருக்கும் மனைவியாக மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதித்தான். பின்பு ஒரு நல்ல மங்கல நாளில் தெளமிய முனிவர் தலைமையாளராக இருந்து பாண்டவர்கட்கும் திரௌபதிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தின் போது பாண்டவர்கள் தங்கள் உண்மை உருவத்தோடு விளங்கினர். இந்தச் செய்தி எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்துவிட்டது. சுயம்வரத்திற்கு அந்தணருருவில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்பதை அறிந்ததும் கெளரவர்களின் சினத் தீ பெருகி வளர்ந்தது. முன்பே இருந்த பகையும் ஒன்று சேர்ந்து கொண்டது. அவர்கள் பாண்டவர் மேல் படை எடுத்துப் புறப்பட்டனர்.

13. தருமன் முடி சூடுகிறான்

உலகத்தில் தாங்கள் எந்த இடத்தை நிலைக்களன்களாக கொண்டு தோன்றுகின்றனவோ அந்த இடத்தையே அழிக்கும் பொருள்கள் இரண்டே இரண்டு தாம் இருக்கின்றன. ஒன்று நெருப்பு மற்றொன்று பொறாமை தான் எந்தக் கட்டையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எரிக்கின்றதோ அதையே அழித்து விடுகிறது நெருப்பு. தான் எந்த மனத்தில் அளவை மீறி வளர்கின்றதோ அந்த மனத்தையே அழித்து விடுகிறது பொறாமை திரௌபதி சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன்! அவனோடு வந்தவர்கள் பாண்டவர்கள். துருபத மன்னன் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் திருமணம் நிகழ்த்தி விட்டான் என்று வரிசையாக இந்தச் செய்திகளை எல்லாம்