பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தோற்றுவாய்

உலகம் என்ற ஒன்று தோன்றிய நாளிலிருந்து அறம், மறம் என்னும் இரண்டு மாறுபட்ட பேருணர்ச்சிகளும் தோன்றிப் போராடித்தான் வருகின்றன. காலந்தோறும் வாழ்க்கை தோறும் மனித சமுதாயத்தின் உயர்நிலை தாழ்நிலை ஆகிய நிலைகள் தோறும் தர்ம அதர்ம யுத்தம் என்கிற இந்தச் சத்திய அசத்தியப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாகரிக வளர்ச்சியோ இதயப் பண்பாடோ, அல்லது சமூக முன்னேற்றமோ, எந்த ஒரு புதுமையின் முயற்சியாலும் உலகின் அழியாப் போராகிய இந்தப் போரை நிறுத்தவே முடியவில்லை. மண்ணும் விண்ணும் மண்ணையும் விண்ணையுங் கொண்டு வாழும் உயிரினங்களும் உள்ள வரை இந்தப் போரும் நித்தியமாக நிலைத்து நின்று நிகழும் என்பதை மறுக்க முடியாது. இதை வற்புறுத்துவது போலக் காலமும் கவிகளின் உள்ளமுமாக இணைந்து கொடுத்த எண்ணற்ற பல காவியங்களின் தொகுதி நம் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.

காவியங்களைக் கற்கும் போதும் ‘இது என்றோ நடந்தது; அல்லது கற்பனை செய்யப்பட்டது’ என்னும் நினைவு நமக்கு எழலாம். மெய்தான்! அப்படி எழுகின்ற நினைவு மனித மனத்திற்கு இயற்கையே. ஆனால் கால முற்பாடும், ‘கற்பனையோ?’ என்ற நினைவும் ‘காவியங்களில் அறப்பண்புகளும் மறப்பண்புகளும் மோதுகின்றன. இறுதியில் வெற்றி தோல்வியும் ஏற்படுகின்றது’ - என்ற நமக்குத் தேவையான உண்மையைச் சிறிதளவும் பாதிக்க முடியாதல்லவா? உண்மைக்கும் வாய்மைக்கம் நிகழ்ந்த போர் அரிச்சந்திரன் கதையாக நிலவுகிறது. விதிக்கும் தனி