பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

123

சுபத்திரையிடமும் தன் ஆத்திரத்தை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டு பரிசில்களையும் அளித்தான். சில நாட்கள் அவர்களோடு தங்கியிருந்துவிட்டுப் பலராமன் துவாரகைக்குச் சென்றான். கண்ணபிரானோ பிரிய மனமின்றி அவர்களுடனேயே தங்கியிருந்தார். காலம் இன்ப வெள்ளமாகக் கழிந்து சென்று கொண்டிருந்தது. உரிய காலத்தில் அர்ச்சுனன் - சுபத்திரை இவர்களுக்கு ‘அபிமன்யு’ என்ற வீரப்புதல்வன் பிறந்தான். பாண்டவ புத்திரர்களாகத் திரெளபதிக்கு ஐந்து ஆண் மக்கள் பிறந்திருந்தார்கள். இவர்கள் வளர்ந்து நினைவு தெரிகின்ற பருவத்தை அடைந்தபோது குருகுல வாசம் செய்து அறிவுக் கலையும் போர்க் கலையும் கற்றுக் கொள்ள ஏற்ற ஆசிரியர்களை நியமித்தனர்.

16. வசந்தம் வந்தது

புதல்வர்களின் குருகுல வாசமும், பாண்டவர்களின் அமைதி நிறைந்த நல்வாழ்வுமாக இந்திரப்பிரத்த நகரத்தில் நாட்கள் இன்ப நிறைவுடனே கழிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மனோரம்மியமான வசந்த காலம் வந்தது. எங்கும் தென்றல் காற்று வீசியது. சோலைகள் தோறும் குயில்கள் தங்கள் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் இன்னிசைக் கீதங்களைப் பாடின. தீக்கொழுந்துகளைப் போல மாமரங்களில் செந்தளிர்கள் தோற்றின. பொய்கைகளின் குளிர்ந்த நீர்ப்பரப் பிற்கு மேல் பசிய இலைகளுக்கிடையே அல்லி தாமரை முதலிய மலர்கள் அழகு செய்தன. வசந்தகாலத் தலைவனாகிய மன்மதன் தென்றலாகிய தேரில் ரதியோடு பவனி வரத் தொடங்கியிருந்தான். வசந்த காலத்தின் இன்பத்தை நுகரும் ஆவலால் கண்ணபிரானும் அர்ச்சுனனும் தத்தம் தேவியர் களுடனும் உரிமை மகளிர்களுடனும் இந்திரப்பிரத்த நகருக்கு அருகிலிருந்த ஒர் பூஞ்சோலைக்குச் சென்று