பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அறத்தின் குரல்

கடவுளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவனையும் எதிர்க்கத் துணிந்து விட்டான் அர்ச்சுனன்.

உறவு முறையை விடக் கடமை சிறந்தது அல்லவா? அர்ச்சுனன் வாக்களித்த மறுகணத்திலேயே காண்டவ வனத்தில் எங்கும் நெருப்புப் பற்றிக் கொண்டு பயங்கரமாக எரியலாயிற்று. வனத்திலே பிடித்த நெருப்பின் ஜ்வாலை பிரதிபலித்ததனால் எட்டுத் திசைகளும் தகத்தகாயமாகச் செந்நிறம் படியத் தொடங்கி விட்டது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசத் தொடங்கி விட்டதனால் நெருப்பிற்கு வசதி பெருகிவிட்டது. காட்டு மூங்கில்கள் தீயில் வெடிக்கும் ஒலியும் அங்கே வசிக்கும் விலங்குகள் தீயிலிருந்து தப்புவதற்கு வழி தோன்றாமல் வேதனையோடு கிளப்பிய துயர ஓலங்களுமாகக் காடெங்கும் கிடுகிடுத்தன. சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், பலவகைப் பறவைகள் எல்லாம் நெருப்பிலே சிக்கி நீறுபட்டுக் கொண்டிருந்தன. அசுரர், வேடர் முதலிய இனத்தவர்களாகிய மக்களும் தீக்கிரையாயினர்.

காண்டவம் தீக்கிரையாகும் செய்தி இந்திரனுக்கு எட்டியது. அடக்கமுடியாத ஆத்திரம் பொங்கியது அவன் உள்ளத்தில் தனக்கு மிகவும் வேண்டியதான தட்சகனென்னும் பாம்பு காண்டவ தகனத்தில் அழிந்து போய் விடுமோ என்றஞ்சியது அவன் மனம். காண்டவத்தில் பற்றி எரியும் நெருப்பை உடனே சென்று அவித்து நிர்மூலமாக்கும்படி தன் கட்டளைக்குட்பட்ட எல்லா முகில்களையும் ஏவினான் இந்திரன். முகில்களை முதலில் அனுப்பிய பின் தானும் சினம் பொங்கும் தோற்றத்தோடு படைகளுடன் ஐராவதத்தில் ஏறிப் புறப்பட்டான். கனற்கடவுள் காண்டவத்தைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்கும் போது மேலே கொண்டல்கள் திரண்டு மழை சோணாமாரியாகப் பிரளய வெள்ளமாகக் கொட்டு கொட்டென்று கொட்டத் தொடங்கிவிட்டது.