பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

131

நிம்மதியும் திருப்தியும் இன்றி எனக்குள்ளேயே குழம்பும் படியாக நேரிட்டு விடும். உங்களைப் போலவே பிறரைப் பற்றியும் சிந்தித்து அவர்கள் நலனுக்காக உதவும் பண்புடையவர்கள் நீங்கள். சிற்பக் கலையில் நல்ல பழக்கமுள்ளவன் யான். கலைஞர்களெல்லாம் கண்டு அதிசயிக்கும்படியான ஓர் அழகிய மணிமண்டபத்தை உங்களுக்கு நான் கட்டித் தருகிறேன். எளியேனுடைய நன்றியின் சின்னமாக நீங்கள் அந்த மண்டபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்டபம் அமைப்பதற்குரிய பொருள்கள் யாவும் ஓர் இடத்தில் மறைந்து கிடக்கின்றன. முற்காலத்து அரசன் ஒருவனால் புதைக்கப்பட்டுள்ள பொருள்கள் அவை. ‘விடபருவன்’ என்ற அசுர குலத்துப் பேரரசன் ஒருவன் தனது அரும்பெரும் முயற்சியாலே ஈட்டிய பொருள்களை எல்லாம் எவரும் அறியாதவண்ணம் ‘பிந்து’ -என்னும் பொய்கையில் மறைத்து வைத்துள்ளான். அவன் இறந்த பிறகு அந்தப் பொருள்கள் எவராலும் பயன்படுத்தப் பெறாமல் அப்படியே மறைந்து கிடக்கின்றன. அந்தப் பொருள்களை எடுத்து வந்துவிட்டால் கட்டப் போகிற மணிமண்டபத்தை மிக உயர்ந்த முறையில் கட்டிவிடலாம். அவற்றை எடுத்து வருவதற்கு மட்டும் உங்கள் உதவி எனக்கு வேண்டும்.” மயனுடைய நன்றியுணர்ச்சியும் களங்கமற்ற அன்பும் பாண்டவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன.

“மணிகளையும், அருமையான பல பொருள்களையும் உள்ளடக்கிய விடப்பருவனின் மறைந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்குத் தங்கள் உதவி பூரணமாக உண்டு என்று வாக்களித்த தருமன் உடனே தகுந்த வீரர்களை அழைத்து வரச் செய்தான். ஆற்றலும் செயல் திறனும் மிக்க வீரர்கள் பலர் அழைத்து வரப்பட்டனர். “விட பருவனுக்குச் சொந்தமான ‘பிந்து’ என்னும் பொய்கையில் மறைந்திருக்கும் நிதிகள் யாவற்றையும் கண்டுபிடித்து விரைவில் கொண்டு வாருங்கள்” என்று தருமன் அவர்களுக்குக் கட்டளை