பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அறத்தின் குரல்

கண்ணபிரான் மூவரும் தோற்றத்தை மாற்றிக் கொண்டு புறப்பட்டனர். சராசந்தனின் தலைநகருக்குப் பெயர் கிரி விரசநகரம். வலிமையான அரண்களாலும் தகர்க்க முடியாத பாதுகாப்பினாலும் சிறந்தது அந்த நகரம். சூதுவாதறியாத அந்தணர்களைப் போலச் சென்றிருந்ததனால் சராசந்தனின் கோட்டைக்குள் சுலபமாக நுழைய முடிந்தது அவர்களால் அந்தணர்கள் மூவர் சந்திக்க வந்திருப்பதாக மெய்க் காவலர்கள் மூலம் சராசந்தனுக்குக் கூறி அனுப்பினர். தன்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தான் சராசந்தன். வீமன் முதலிய மூவரும் சென்றனர். சராசந்தன் அவர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்தான். அந்தணர்களை உற்றுப் பார்த்தான். ஆட்களை ஒரு முறை கூர்ந்து நோக்கியவுடனே அவர்களை இன்னாரென்று எடை போட்டு நிர்ணயித்து விடுகிற ஆற்றல் பொருந்தியவை அவனது கண்கள்!

வீமன் முதலியவர்கள் சராசந்தனை ஏமாற்றுவதற்காக வேற்றுருவில் வந்தார்கள். ஆனால், சராசந்தன் அவ்வளவு சுலபத்தில் ஏமாறிவிடுகிறவனா என்ன? அவனுடைய மத நுட்பம் அவனுக்கு உதவி செய்தது. எதிரே அமர்ந் திருப்பவர்கள் போலி அந்தணர்கள் என்பதை அவன் அறிந்து கொண்டு விட்டான். மூவரும் அந்தணர்களுக்குரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தோள்களில் தென்பட்ட வில் தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தணர்கள் தோளில் வில் தழும்பு இருக்க வேண்டிய அவசியமில்லையல்லவா? ‘இவர்கள் மூவரும் க்ஷத்திரியர்கள்! ஏதோ ஒரு சூழ்ச்சியின் நிமித்தம் இப்படித் தோன்றி நம்மை ஏமாற்றக் கருதியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் யார் என இப்போதே விசாரித்துவிட வேண்டும்’ சராசந்தன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

“அந்தணர்களே! உண்மையில் நீங்கள் மூவரும் அந்தணர்கள் தாமா? உண்மையை ஒளிக்காமல் என்னிடம் சொல்லிவிடுங்கள்” -சராசந்தன் திடீரென்று தங்களை