பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

151


வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் சகுனி எழுந்து அருகில் சென்றான். “மாமனே! நீ கூறிய யோசனைக்கு என் இதயபூர்வமான நன்றி. சூழ்ச்சியால் தருமனையும் அவன் தம்பியரையும் வெல்லலாம் என்றாய் அப்படி வெல்வதற்கான திட்டங்களையும் நீயே எனக்குக் கூற வேண்டும்” -என்று துரியோதனன் அருகில் வந்த சகுனியிடம் கேட்டான்.

“அரசே! சூதாட்டத்தில் எத்தகையவர்களையும் வெற்றி கொள்ளும் திறன் எனக்கு இருக்கின்றது. பாண்டவர்களையும் இதே திறமையால்தான் வெல்ல வேண்டும். இந்த நகரில் இதுவரை அமையாத சிறப்புக்களோடு புதிய மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள். அந்த மண்டபத்தைக் காண வரவேண்டும் என்று பாண்டவர்களுக்கு அழைப்பு அனுப்பினால் அவர்கள் மறுக்காமல் வருவார்கள். மண்டபத் திறப்பு விழாநாளில் மண்டபத்தை அவர்கள் கண்டு முடித்த பின், “இப்படியே இந்தப் புதிய மண்டபத்தில் பொழுது போக்காகச் சிறிது நேரம் சூதாடலாம்” என்று சூதுக்கு அழைப்போம். தருமனுக்குச் சூதாட்டம் பிடிக்காது என்றாலும் அதற்கு அவனை இணங்கச் செய்வது கடினமான காரியம் இல்லை. முதலில் விளையாட்டுக்காக ஆடுவது போல ஆடுவோம். பின்பு பாண்டவர்களின் உடைமைகளை ஒவ்வொன்றாகக் கவர்ந்து கொள்ளலாம். அவ்வாறு அவர்கள் உடைமைகளைக் கவர்ந்து அவர்களை ஏழையாக்குவது என் பொறுப்பு” -என்றான் சகுனி. அவனுடைய திட்டங்களால் மனமகிழ்ந்த துரியோதனன் அவனை அன்புடன் மார்புறத் தழுவி நன்றி தெரிவித்தான். மாமன் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்ததும் “மாமனின் யோசனையைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?” என்று விதுரனைப் பார்த்துக் கேட்டான் துரியோதனன்.

“துரியோதனா! நீயும் சகுனியும் உங்களுடைய குறுகிய மனத்திற்குத் தகுந்த எண்ணங்களையே எண்ணுகின்றீர்கள். பாண்டவர்களுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்வதற்கு இவ்வளவு பெரிய சூழ்ச்சிகள் எதற்கு? நேரே தருமனிடம்