பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

167


‘தருமா! நீ கூறுவது போலச் சூதாட்டம் என்பது அவ்வளவு பயங்கரமான ஒன்று அல்ல. ஆனாலும் நீ ஏனோ இதற்கு இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றாய்? சூதுக்காய்களின் முடிவுப்படியே ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் ஏற்படுகின்றன. வேறெந்தவிதமான சூழ்ச்சிக்கும் இதில் இடமில்ல. உனக்குச் சூதாடுவதற்கு வேண்டிய திறமை இல்லையென்றால் அதற்காகச் சூதாட்டத்தை ஏன் குறை சொல்கிறாய்?”

தருமன் சகுனிக்கு மறுமொழியே கூறவில்லை. மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். சகுனி இந்த மெளனத்தைப் பொருட்படுத்தாமலே மேலும் பேசத் தொடங்கினான்.

“நான் கூறுவதைக் கேள்! ஒருவரை ஒருவர் நம்பி விருப்பத்தோடு சூதாடப் போகிறோம் நாம். நான் தோற்றால் நீ வெற்றி அடைவாய் நீ தோற்றால் நான் வெற்றி அடைவேன். இவ்வளவுதானே? வேண்டுமானால் உனக்காக இரண்டு மடங்கு பந்தயப் பொருளை நான் கொடுக்கிறேன். எனக்கு நீ ஒரு பங்கு பந்தயப் பொருளைக் கொடுத்தால் போதும். சூதாடத் தயங்குகிறாயே நீ? உன்னிடம் செல்வம் இல்லையா? நீ ஏழையா?... பின் ஏன் தயங்குகின்றாய்? பசுவதை செய்துவிட்டுப் பின்னர், ‘ஐயோ, மாபெரும் பாவத்தை செய்து விட்டோமே! என்ன விளைவு நேருமோ?’ என்று நடுங்குகிறவர்களைப் போல நீயும் நடுங்குகிறாயே ஏன்? சூதாடுவதற்குக் கூடத் தைரியமில்லாமல் அஞ்சினால் உன் ஆண்மையைப் பற்றி இங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?” -என்று தன்னுடைய முழுச் சாமர்த்தியத்தையும் பயன் படுத்தித் தருமனை இணங்கச் செய்வதற்கு முயன்றான் சகுனி. ‘தான் அப்போது தன் வழியில் சிந்தித்துத் தன் போக்கில் நடக்கும் நிலையில் இல்லை! விதியின் வழியில் சுழன்று கொண்டிருக்கிறோம்’ -என்பதை உணர்ந்திருந்த தருமன் முன் போலவே அமைதியாக இருந்தான்.