பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அறத்தின் குரல்

சூதாட்டக் காய்களிலுமா அப்படி உண்டு? வஞ்சகத்தைக் குணமாகக் கொண்டே சகுனியின் மனத்தைப் போலவே அந்தக் காய்களைத் தச்சன் செய்திருந்தானோ என்னவோ? காய்கள் இந்த இறுதி முறையிலும் தருமனைக் கைவிட்டு விட்டன. தருமன் திரெளபதியையும் தோற்றுவிட்டான். தோற்கக் கூடாத பொருளைத் தோற்றுவிட்டான். விதிக்கும் கெளரவர்களுக்கும் வெற்றி. சத்தியத்துக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு சோதனை.

‘திரெளபதியையும் தோற்றுவிட்டோம்’ என்றெண்ணும் போது ஒரு சில கணங்கள் அவன் உள்ளம் தளர்ந்தது. ஒடுங்கியது, விம்மியது, உணர்வுகள் குழம்பின. அவன் கலங்கினான். மிக விரைவிலேயே அவனுடைய இயற்கைக் குணமாகிய, சாந்த குணம், கை கொடுத்து உதவியது. தருமன் கலக்கமின்றி இருந்தான்.

7. தீயன செய்கின்றான்

சூதாட்டத்தினால் தருமனுக்கு விளைந்திருந்த அடுக்கடுக்கான தோல்விகளைக் கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கினார்கள். தோற்கடிக்க முடியாத பொருள்களைத் தாங்களே தோற்றுவிட்டது போன்ற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்குள் பலவாறு இரங்கிப் பேசிக் கொண்டார்கள்! “என்ன இருந்தாலும் பண்பிற் சிறந்தவனாகிய தருமன் இத்தகைய சூழ்ச்சி நிறைந்த சூதாட்டத்திற்கு இணங்கியிருக்கக் கூடாது!”

“இணங்கினால் தான் என்ன? இப்படியா தோல்விமேல் தோல்வியாக ஏற்பட்டு நல்ல மனிதனை மனங்கலங்கச் செய்ய வேண்டும்? விதிக்குக் கண்ணில்லையா? அறக் கடவுளுக்கு ஏன் இந்தப் பாராமுகம்?”

“எல்லாம் இந்த மாமனுடைய வஞ்சகச் செயல்கள். துரியோதனனும் அவனுடைய தந்தையும் பாண்டவர்கள்