பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

203

பராசக்தியாகிய உமாதேவி தோன்றிய அந்த மலையின் மேல் அவனுக்குத் தனிப்பட்ட பய பக்தி ஏற்பட்டது. எங்கு நோக்கினும் முனிவர்களும் தபஸ்விகளுமாகத் தென்பட்ட அந்த மலையில் அவர்களையெல்லாம் வணங்கி வழிபட்ட பின்னர் கைலாச சிகரம் நோக்கி அவன் மேலும் பயணம் செய்தான். அரிய முயற்சியின் பேரில் யாத்திரை செய்து கைலாச சிகரமடைந்த அர்ச்சுனன் வியாச முனிவரின் யோசனையின்படி தன் தவத்தை அங்கே தொடங்கினான். பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி ஒற்றைக் காலில் நின்று கொண்டு தியானத்தில் ஈடுபட்டான்; கைகள் சிரத்திற்கு மேல் உயர்ந்து வணங்கும் பாவனையில் குவிந்திருந்தன. அப்போது விளங்கிய அவனுடைய தோற்றம் சிவபெருமானே அங்கு வந்து நின்று தவம் செய்வதைப் போல இருந்தது.

புலன்களின் ஒடுக்கத்தில் அறிவு மலர்ந்து பரம் பொருளை நோக்கிப் படர்ந்தது. அவனைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் வளர்ந்த பஞ்சாக்கினிகள் வெம்மையை உண்டாக்கியதாகவே தோன்றவில்லை. நெஞ்சம் சிவனை எண்ணிச் சிவமயமாக இருந்தது. உடல் புளகித்தது. இன்பமயமான அந்தப் பரம்பொருள் தியானத்தில் மெய்சிலிர்த்துச் சிலிர்த்துப் புற உணர்வுகள் ஓயப்பெற்ற அந்த உடல் நாளடைவிலே கற்சிலை போல் இறுகி விட்டது. உணர்ச்சிகள் அடங்கி உள்முகமாக ஒடுங்கி விட்டன. மலைச் சிகரங்களிடையே ஒரு கற்சிலை நிற்பது போல அவன் உடலும் நின்றது. காட்டு யானைகள் உடல் தினவு தீர்த்துக் கொள்ளும் நோக்குடனே அவனுடைய சரீரத்தைக் கற்பாறை என்றெண்ணி அதன் மேல் உரசிக் கொண்டன. உடலின் கீழ்ப் பகுதியில் மண் மேவியதால் அதைப் புற்று என்றெண்ணிப் பாம்புகள் வாசஞ்செய்ய வந்து விட்டன. மனித சரீரம் நெகிழ்ந்து, ஆன்ம சரீரம் வலுப்பட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் தழைத்திருந்த செடி கொடிகள் சரீரத்தை மறைத்துத் தழுவிப் படந்து வளர ஆரம்பித்து விட்டன. காலம் வளர்ந்து கொண்டே போயிற்று. சிவ நாம