பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

அறத்தின் குரல்


“அடியேன் விருப்பம் தேவரீருக்குத் தெரியாதது அல்ல. ‘பாசுபதாஸ்திரம்’ பெறுவதற்காகவே இவ்வரிய தவ முயற்சியை மேற் கொண்டேன்.”

சிவபெருமான் பாசுபதாஸ்திரத்தையும் அதனைப் பிரயோகிப்பதற்குரிய முறை நூல்களையும் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார். அர்ச்சுனன் சர்வாங்கமும் பூமியில் படுமாறு கீழே விழுந்து வணங்கினான். சிவபெருமான் அவனுக்கு எல்லா நலன்களும் உண்டாகுமாறு ஆசி கூறி மறைந்தார்.

அர்ச்சுனனுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும்போது தானும் தன் பரிவாரங்களோடு அங்கே வந்திருந்தான் இந்திரன். சிவபெருமான் வரங்கொடுத்து விட்டுச் சென்றதும் தேவர்கோனாகிய இந்திரன் அர்ச்சுனனை அணுகி, “மகனே! சோதனைகளெல்லாம் கடந்து உன் தவத்தில் வெற்றி பெற்று விட்டாய். அது கண்டு மிகவும் மகிழ்கிறேன். நீ சில நாட்கள் எங்களுடனே வந்து விருந்தினனாகத் தங்கியிருத்தல் வேண்டும். என் வேண்டுகோளை மறுக்கக்கூடாது” என்றான். அர்ச்சுனன் சம்மதித்து அவனோடு வானுலகுக்குப் புறப்பட்டான். தேவருலகில் அர்ச்சுனனின் விதி அவனுக்காக ஊர்வசி உருவத்தில் காத்திருந்தது போலும். இந்திரன் அர்ச்சுனனுடைய வரவைக் கொண்டாடுவதற்காகத் தன் உரிமை காதல் மகளிருள் ஒருத்தியாகிய ஊர்வசியின் நாட்டியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஊர்வசியின் நாட்டியத்தைக் காண்பதற்காக வந்து வீற்றிருந்த அர்ச்சுனனின் மோகனத்தோற்றத்தைக் கண்டு அந்த நடனராணியே அளவற்ற மையல் கொண்டு விட்டாள். நாட்டியம் முடிந்ததும் தான் தனியாகத் தங்கியிருக்கும் மாளிகைக்குச் சென்று விட்டான் அர்ச்சுனன். அவன்மேற் கொண்ட மையலை அடக்க முடியாத ஊர்வசி தனியாக அவனைச் சந்தித்து, தன் மோகத்தை வெட்கமின்றி வெளியிட்டாள். இச்சையை நிறைவேற்றும்படி கேட்டாள். அர்ச்சுனன் திடுக்கிட்டான்.