பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

213


“அம்மணி! நீ எனக்கு தந்தை முறையுடைய இந்திரனின் காதல் கிழத்தி. உன்னை நான் என் தாயாக எண்ணுகிறேன்” என்று கூறி ஊர்வசியின் விருப்பத்தை மறுத்து விட்டான். இச்சையும் மோகமும் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த ஊர்வசிக்குக் கடுமையான சினம் மூண்டது. தனக்குள்ள சாபம் கொடுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அர்ச்சுனனை ஆண் தன்மை இழந்து பேடியாகுமாறு செய்துவிட்டாள். அர்ச்சுனன் பேடியானான். ஊர்வசியின் சாபத்தால் விளைந்த இந்தக் கோர விளைவை எண்ணி மாளிகையை விட்டு வெளியேறாமலிருந்தான் அர்ச்சுனன். இந்திரன் முதலிய தேவருலகப் பெருமக்கள் வந்து பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டனர். ஊர்வசியின் அடாத செயலைக் கண்டிப்பதற்காக இந்திரனும் தேவர்களும் அவளிருப்பிடம் சென்றனர்.

ஊர்வசி, தேவர்களும், இந்திரனும் கூட்டமாக வருவதைக் கண்டு அஞ்சி, “அர்ச்சுனன் தான் விரும்பினால் பேடிவடிவத்தை அடையட்டும், இல்லையெனில் சுய உருவோடிருக்கட்டும்” என்று சாபத்தை மாற்றி விட்டாள். உடனே அர்ச்சுனனுக்குப் பழைய ஆண்மை வடிவம் வந்தது. அவன் கவலை நீங்கி வானவர் கோமான் மனமகிழ இன்னும் சில நாட்கள் விருந்தினனாக அங்கே தங்கியிருந்தான்.

4. இந்திரன் கட்டளை

வானுலகில் விருந்தினனாகத் தங்கியிருந்த நாட்களில் இந்திரன் அர்ச்சுனனைத் தனக்குச் சரிசமமான உபசாரங்களையும் போற்றுதல்களையும் செய்து பேணினான். அர்ச்சுனனின் பெருமையை வாய் சலிக்காமல் தேவர்களுக்கு எடுத்துரைத்தான். இந்திரனுடைய அரசவையிலே அவனுக்கு மிக அருகில் இணையாசனத்தில் வீற்றிருந்தான் அர்ச்சுனன். “வானுலகத்துப் பெருமக்களே! இதோ என்னருகில்