பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

221


“நாம் அஞ்ச வேண்டாம்! அந்த நகரத்தை நோக்கி நம்முடைய தேரைச் செலுத்து. அவர்கள் இதுவரை என்னவென்று அறியாத தோல்வியை இன்று அவர்களுக்கு அறிவிப்போம்.”

மாதலி தயங்கினான். அவனுக்குப் பயம் தெளியவில்லை.

“தயங்காதே மாதலீ! காலகேயர்களை வென்று அடக்குவது என் பொறுப்பு! நீ பயப்படாமல் தேரைச் செலுத்து-” அர்ச்சுனன் மீண்டும் வற்புறுத்தித் தூண்டினான். மாதலி மறுக்க வழியறியாமல் காலகேயர்கள் வசிக்கும் இரணிய நகரத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனனுடைய தேர் இரணிய நகரத்து எல்லையை அடைவதற்கு முன்பே காலகேயர்கள் அவன் போருக்கு வருவதை எப்படியே உணர்ந்து விட்டார்கள். தேரேறித் துணிவோடு தங்களுடன் போருக்கு வரும் மானிடனை எண்ணித் தாங்களே பரிதாபப்பட்டுக் கொண்டனர். அறுபதினாயிர காலகேயர்களும் போர்க்கோலம் பூண்டு எதிர்க்கப் புறப்பட்டனர். கண்டவர்களை மயக்கும் அழகிய தோற்றம் உடையவர்களாகிய அவர்களுக்குப் போர்க் கோலமும் சினமும் கூடக் கவர்ச்சி நிறைந்தே தோற்றமளித்தது.

தேரில் நின்று கொண்டு வளைத்த வில்லும் தொடுத்த கணையுமாக அந்த அசுரர்களான அழகர்களைப் பார்த்த போது அர்ச்சுனனுடைய கைகளும் மனமும் ஒரு கணம் தயங்கின. இப்படிப்பட்ட அழகுள்ளவர்கள் தீயவர்களாக இல்லாமலிருந்தால் இவர்களைக் கொல்ல வேண்டாமே! இப்போது இந்த அழகைக் கண்டு மனம் பேதலிக்கிறதே! கைகள் தயங்குகின்றனவே? அர்ச்சுனன் வில்லை வளைப்பதை நிறுத்தினான். ஓரிரு விநாடிகள் தயங்கினான். வைத்த கண் வாங்காமல் அவர்களைப் பார்த்தான். ஆனால் அவனுடைய தயக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் காலகேயர்கள் பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் அவன் மேற் பாய்ந்தார்கள்.