பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

231

வீமனுக்குத் தோற்று, குபேரனை நோக்கி ஓடும்படியாக நேர்ந்தது.

“அரசே! அவன் சாதாரண மனிதன் இல்லை அளவிடற்கரிய வலிமை உடைய பெரு வீரன். அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அவனோடு பகைத்துக் கொள்ளாமல் நமக்கு நண்பனாக்கிக் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது” என்று தோற்றோடி வந்த சங்கோடணன் குபேரனை நோக்கி முறையிட்டுக் கொண்டான். குபேரன் உடனே தன் புதல்வன் உத்திரசேனனை அழைத்துப் பின்வருமாறு கட்டளையிட்டான்.

“மகாவீரனான அந்த அற்புத மனிதன் யார்? அவனைப் பார்த்து அவன் யாரென்று தெரிந்து கொண்டு வா ! இயலுமானால் அவன் கேட்கும் பொருளைக் கொடுத்து விட்டு வா!” தந்தையின் கட்டளைப்படி உத்திரசேனன் பூம்பொழில் சென்று அங்கு வந்திருக்கும் மனிதனைக் காணப் புறப்பட்டான். வீமன் வெற்றி வீரனாகப் பூம்பொழிலில் தனியே நின்று கொண்டிருந்தான்.

“அப்பா! நீ எவ்வுலகைச் சேர்ந்தவன்? எதற்காக இங்கே பலரைக் கொன்று அரும்பாடுபட்டுப் போர் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” உத்திரசேனன் அன்பும் கோபமும் கலந்த குரலில் வீமனை நோக்கிக் கேட்டான்.

உடனே வீமன், “என் பெயர் வீமன். நான் வாயுவின் புதல்வன். கண்ணபிரானுடைய மைத்துனன். இங்குள்ள தெய்வீகமலர் ஒன்று எனக்கு வேண்டும். அதைக் கொடுத்தால் நான் போய்விடுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறினான். உத்திரசேனன் அப்போதே வீமன் கேட்ட மலரைப் பறித்து அவனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றான். மலர் பெற்ற வீமன் அங்குள்ள குளிர் பூந்தடாகம் ஒன்றில் அலுப்புத் தீர நீராடிவிட்டுக் களைப்புத் தீர அச்சோலையில் தங்கியிருந்தான். இஃது இவ்வாறிருக்க அங்கே வீமன் எங்கே போனான் என்று தெரியாத தருமன் கலக்கமுற்றுப் பல