பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

241


அப்போது சரியான நடுப்பகல் நேரமாகியிருந்தது. துருவாசரும் அவரைச் சேர்ந்தவர்களும் வருவதற்கு முன்பே பாண்டவர்களும் திரெளபதியும் இருந்த உணவுப் பொருள்களை உண்டு முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்திருந்தனர்.

“பாண்டவர்களே! உங்களை இன்று சந்திக்க நேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சி. நானும் எனது நண்பர்களும் சேர்ந்து இன்று இங்கே உண்ணலாம் என்று இருக்கின்றோம். போய் நீராடிவிட்டு வருகின்றோம், உணவு தயாராக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு நீராடப் புறப்பட்டு விட்டனர் துர்வாசர் முதலியோர். பாண்டவர்கள் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்தனர். வேண்டுமென்றே தங்களுக்குச் சாபத்தைப் பெறுவிக்க வேண்டுமென்பதற்காகத் துரியோதனாதியர்கள் இந்தச் சூழ்ச்சியைச் செய்திருப்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. எப்போதுமே விரைவில் ஆத்திரத்தை அடைந்து விடக் கூடிய சுபாவத்தை உடையவனாகிய வீமன் இப்போதும் அதேபோற் சினமடைந்து ‘உடனே போய்த் துரியோதனாதியர்களைத் துவம்சம் செய்து விடுகிறேன்’ என்று கிளம்பி விட்டான். “நீ கூறுவதும் செய்யப் புகும் ஆத்திரமான செயலும் சிறிதளவும் நன்றாக இல்லை வீமா! முனிவர் உண்ண வருகிறேனென்று சொல்லிவிட்டு நீராடப் போயிருக்கும் போது நீ போருக்குப் புறப்படுவது அவருடைய கடுஞ் சாபத்தை வலுவில் அடையக் காரணமாகும்” என்று கூறி அர்ச்சுனன் வீமனைத் தடுத்தான்.

“எப்படியாவது துருவாசருக்கும் மற்றவர்களுக்கும் உணவு படைத்து ஆகவேண்டும். அதற்கான வழியைக் காண முயல்வோம்” என்றான் தருமன்.

“எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் உதவிக் காப்பவன் கண்ணபிரான். அவன் துணையையே இப்போதும் நாடுவோம்!” நகுலன் கூறினான்.

அ.கு. -16