பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

263

என்னுடைய இந்த விரதங்களுக்கு அடைக்கலம் அளித்து என்னைப் பணிமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.” விராடராசனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை அன்புடன் ‘விரதசாரிணி’யை ஏற்றுக் கொண்டாள். அவளுடைய கற்புக்கும் தனிமை விரதங்களுக்கும் பாதுகாப்பளிப்பதாக உறுதி கூறினாள்.

‘விரதசாரிணியாக’ மாறி வந்த திரெளபதி அங்கிருக்க உடன்பட்டாள். சுதேஷ்ணையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது அவளுக்கு இவ்வாறு பாண்டவர்கள் ஐவரும், அவர்கள் தேவியான திரெளபதியும் தத்தம் கலைகளின் திறமையாலும், மாறுவேடம் செய்த உதவியாலும், விராட நகரத்து அரண்மனையில் மறைந்து வாழத் தொடங்கினார்கள். இப்படி அவர்கள் வாழ்ந்து வரும்போது வீமனுக்குத் தன்னுடைய மற்போர் வன்மையை விராடனுக்கு முன்பு வெளிப்படுத்தும்படியான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது.

‘பலாயனன்’ -என்ற பெயரில் மறைந்து கொண்டிருந்த வீமன் இந்த வாய்ப்பைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டான். மற்போரில் பல நகரங்களில் பலரை வென்று வாகை சூடியவனும் மகாவீரனுமாகிய வாசவன் என்ற மல்லன் விராட நகரத்துக்கு விஜயம் செய்திருந்தான். மனவளம் மட்டுமல்ல, உடல் வளமும் பெருகியிருந்தது அவனுக்கு. வாசவன் நடந்து வருகிறான் என்றாலே, ‘சிறுமலை’ ஒன்று கை கால்களைப் பெற்று நடந்து வருவது போலத் தோன்றும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மல்லர்களை வென்று தனக்கு இணை எங்கும் இல்லை என்பதாக அந்தந்த நாட்டரசர்களிடம் விருது பெற்றுத் திக்கு விஜயம் செய்து கொண்டு வந்தான் அவன். வாசவன் விராட நகருக்கு வந்திருந்ததன் நோக்கம் அரண்மனை மல்லர்கள் யாவரையும் வென்று வாகை சூடிச் செல்ல வேண்டும் என்பது தான். விராட மன்னனும் இந்தப் போட்டிக்கு ஒப்புக் கொண்டான். மற்போர் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. வாசவமல்லனோடு