பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

275

கொண்டு வீமனிடம் விடை பெற்றுச் சென்றாள். மறுநாள் வழக்கம் போலவே கீசகன் வெறி மிகுந்தவனாக விரதசாரிணியைச் சந்தித்துத் தன் ஆசையைப் பற்றி ஏதேதோ பிதற்றினான். விரதசாரிணி முதலில் அவன் வேண்டுகோளை மறுக்கின்றவள் போல நடித்துப் பின்பு இணங்கினாள். “இன்றிரவு, அரண்மனைப் பூந்தோட்டத்திலுள்ள உல்லாச அரங்கத்தில் என்னைச் சந்தியுங்கள். உங்களுக்காக நான் அங்கு காத்திருக்கின்றேன்” விரதசாரிணியின் பவழ வாயிலிருந்து இந்தச் சொற்கள் வெளி வந்தனவோ, இல்லையோ, கீசகன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போனான். அப்படியே இரவில் பூந்தோட்டத்தில் சந்திக்க இணங்கி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அன்று நள்ளிரவில் விரதசாரிணி பெண் வேடம் தரிக்கச் செய்து வீமனையும் அழைத்துக் கொண்டு அரண்மனைப் பூந்தோட்டத்தில் போய் மறைந்திருந்தாள்.

கீசகன் வருகின்ற நேரத்தில் விரதசாரிணி தனியே வேறோரிடத்தில் போய்ப் பதுங்கிக் கொண்டாள். பெண்ணுருவில் இருந்த வீமன் கீசகன் கண்ணிற்காணுமாறு அரங்கத்தின் நடுவே வெட்கத்தால் விரதசாரிணி தலை. குனிந்து உட்கார்ந்திருப்பது போல உட்கார்ந்து கொண்டான். கீசகன் நேரே அவனருகில் வந்து மனமுருகி “ஆரணங்கே! இன்றாவது உன் உள்ளம் என்பால் இரங்கியதே! உன் போன்ற பேரழகுடையவர்களை இதுவரை நான் கண்டதே இல்லை” என்று பலவாறு புகழ்ந்து மெல்லத் தழுவ முயல்பவன் போலத் தோளில் கையை வைத்தான்.

அவ்வளவு தான்! கீசகனுடைய முகவாய்க் கட்டையில் இரும்பையொத்த வன்கரமொன்று ஓங்கி ஒரு குத்து விட்டது. பெண் போல உட்கார்ந்திருந்த உருவம் துள்ளி எழுந்து வாட்டசாட்டமான தோற்றத்தோடு பூதாகாரமாக எழுந்திருந்து கீசகனைத் தாக்க ஆரம்பித்தது. கீசகன் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திணறிப் போனான். தான் தழுவ முயன்றது விரதசாரிணியை அல்ல. ‘அரண்மனைச்