பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

அறத்தின் குரல்


“பிருகந்நாளை! ஐயையோ! எனக்கு பயமாக இருக்கிறது. தேரைப் பேசாமல் அரண்மனைக்குத் திருப்பி ஓட்டு. பசுக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன? இந்தப் படைக்கடலுக்கு முன்னால் நிற்கவே என் நெஞ்சில் துணிவில்லை“ -உத்தரகுமாரன் பீதி நிறைந்த குரலில் அலறினான். அவன் பயத்தைப் போக்குவதற்கு எத்தனையோ விதமாக வீர மொழிகளையும், உறுதிமொழிகளையும் கூறிப் பார்த்தான் அர்ச்சுனன். அவன் கேட்கவில்லை. அர்ச்சுனன் தேரை நிறுத்தாவிட்டால் தேரிலிருந்து குதித்து ஓடிவிடுவான் போலிருந்தது.

“நீ துணிவோடு இரு! பசுக்களை மீட்டுக் கொடுப்பது என் கடமை” என்றான் அர்ச்சுனன். அதே சமயம் ஓடிக் கொண்டிருந்த தேரிலிருந்து பின்புறமாகக் குதித்துத் தாவிப் பாய்ந்து ஓடலானான் உத்தரன். அர்ச்சுனனும் உடனே தேரை நிறுத்தி விட்டு இறங்கி அவனைப் பிடிப்பதற்காகப் பின் பற்றி ஓடலானான். விரைவிலேயே பயந்து ஓடும் உத்தரனை எட்டிப் பிடித்துத் தேருக்கு இழுத்துக் கொண்டு வந்தான். உத்தரன் அலறியும் கத்தியும் கூக்குரலிட்டும் திமிறி ஓட முயன்றான். அர்ச்சுனன் அவன் ஓடாமல் இருப்பதற்காக அவனைத் தேரில் கட்டிப் போட்டான். உத்தரன் ஓட முடியாமல் தேருக்குள் கட்டுண்டான். போரை உத்தரனுக்குப் பதில் தானே செய்து விடலாம் என்றெண்ணிக் காளி கோவில் வன்னிமரப் பொந்திலிருக்கும் தன் ஆயுதங்களை எடுப்பதற்குப் புறப்பட்டான். தேரை விட்டு விட்டு நடந்து போனால் உத்தரன் எங்காவது ஓடிவிடுவானோ என்று சந்தேகங்கொண்டு தேரையும் செலுத்திக் கொண்டே காளி கோவிலுக்குச் சென்றான்.

மரப்பொந்திலிருக்கும் ஆயுதங்களை அர்ச்சுனன் எடுத்தபோது தேரில் கட்டப்பட்டிருந்த உத்தரன், “இது ஏது பொந்தில் ஆயுதங்கள்?” என்று கேட்டான்.