பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

283


“உத்தரா! இவை அர்ச்சுனனுடைய ஆயுதங்கள். இவற்றால் போர் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்” -என்று மறுமொழி கூறினாள் பேடி.

“ஆமாம்! அது சரி. அந்த அர்ச்சுனன் இப்போது எங்கிருக்கிறான்?”

“அவனா? வேறெங்கும் இல்லை. இங்கே தான் மிகச் சமீபத்திலேயே இருக்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் களத்தில் நீயே அவனைப் பார்க்க நேர்ந்தாலும் நேரலாம்” -என்றாள் பேடி உத்தரன் அவள் கூறியதை வியப்புடனே கேட்டான். “உத்தரா! இனிமேலும் நீ பயப்படக்கூடாது. போரையெல்லாம் நான் செய்து கொள்கிறேன். நீ தேரை மட்டும் செலுத்தினால் போதும்.”

“ஆகட்டும்! என்னை அவிழ்த்து விடு” -என்று தலையை ஆட்டினான் உத்தரன். தன் முன் பேடியைப் போலக் கோலங்கொண்டு நிற்பது அர்ச்சுனனாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அவன் மனத்தில் தவிர்க்க முடியாத நம்பிக்கை ஒன்று எழுந்துவிட்டது. இந்தப் புதிய நம்பிக்கையின் காரணமாக அவனிடமிருந்து பழைய பயம் நீங்கியது. அர்ச்சுனன் உத்தரனை அவிழ்த்துவிட்டான். உத்தரன் தேரைச் செலுத்தினான். பேடியும் அரசுகுமாரனும் தேரை நிறுத்திவிட்டு ஓடி விளையாடுவது கண்டு எள்ளி நகையாடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கெளரவர் படை இப்போது திடுக்கிட்டு நின்றது. “காரணம் என்ன? ஓடிய அரசகுமாரன் தேரைச் செலுத்திக் கொண்டுவருகிறான். பேடி வில்லேந்தி அம்பு சுமந்து ஆண்மையுள்ளவள் போலப் போருக்கு வருகிறாள்“ -ஆத்திரமும் ஆச்சரியமும் ஒருங்கே அடைந்த துரியோதனாதியர் தம் படைகளை அவசரமாக வியூகம் வகுத்துப் போருக்குத் தயாராக்கினர். உத்தரன், தேர் செலுத்தப் பெண்ணுருவில் பேடியாக இருந்த அர்ச்சுனன் பகைவர்களை நோக்கி சரமாரியாக அம்பு தொடுத்தான்.

பகைப் படையினரும் அவனை எதிர்த்து வளைத்துக் கொண்டு பலர் கூடி ஒரே சமயத்தில் தாக்கினர். அர்ச்சுனன்