பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

அறத்தின் குரல்


“அர்ச்சுனா! இது போர்க்களம். நான் யாருடைய அரசின் கீழ் உண்டு உடுத்து வசதியாக வாழ்ந்தேனோ, அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக என் மாணவனாகிய உன் முன் வில்லேந்தி நிற்கிறேன் பார். உறவும் முறையும் பாராமல் கடமையை எண்ணி நீ போர் புரியத்தான் வேண்டும். நீ போர் புரிய மறுத்தாலும் நான் உன்னோடு போர் புரிந்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறேன்.”

வேறு வழியில்லாமல் போகவே அர்ச்சுனன் துரோணரின் விருப்பத்திற்கிணங்க அவரோடு போர் செய்யத் தொடங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் அமைதியாகவே போர் செய்தனர். நேரம் ஆக ஆக அர்ச்சுனன் செலுத்திய அம்புகளுக்கு மாற்றின்றித் துரோணர் திணறினார். முடிவில் தன் மாணவனாகிய அர்ச்சுனனுக்கு முன்னால் வில்லையும் அம்பறாத் துணியையும் கீழே போட்டு விட்டுத் தோல்வியை ஒப்புக் கொண்டு செல்ல வேண்டிய நிலை அவருக்கும் ஏற்பட்டது. தோல்வியடைந்து செல்கின்ற நிலைமையில் கூடத் தன்னுடைய மாணவனின் திறமை அவருக்கும் ஒருவகைப் பெருமிதத்தையே உண்டாக்கியது. ஆனால் அசுவத்தாமனின் மனத்தில் இந்தத் தோல்வி இதற்கு நேர்மாறான எண்ணத்தையே உண்டாக்கியது.

நம்முடைய தந்தையையே இந்தச் சாதாரண வாலிபன் தோற்று ஓடச் செய்துவிட்டானே என்று மனங்கொதித்த அவன் ஓர் அம்பு எய்து அர்ச்சுனனுடைய வில்லை ஒடித்துக் கீழே தள்ளினான். சினங்கொண்ட அர்ச்சுனன் வேறோர் வில்லை எடுத்துத் தான் அரிய முயற்சியால் பெற்றிருந்த பாசுபதாஸ்திரத்தை அசுவத்தாமன் மேல் எய்தான். அந்த அஸ்திரத்தின் வேகத்தைத் தாங்க முடியாமல் அசுவத்தாமன் தன்னிடமிருந்த சகலத்தையும் இழந்து பதறி அலறி அங்கிருந்து புறம் காட்டி ஓடிவிட்டான். முழு வெற்றி அர்ச்சுனன் பக்கம் வந்து சேர்ந்தது.