பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29


“அப்படியானால் அதற்கும் ஒருவழி இருக்கிறது மகனே! பராசர முனிவரருளால் என் கன்னிப் பருவத்தில் நான் பெற்ற தெய்வீகப் புதல்வன் ஒருவன் இருக்கிறான்! அவன் இப்போது ‘வியாசன்’ என்னும் பெயருடன் நிகரில்லாத முனிபுங்கவனாக விளங்கி வருகிறான். அவனை அழைத்தால் நம் கருத்துப்படி செய்ய இசைந்து தன் அருள் வலிமையினால் விசித்திர விரியனின் மனைவியர் மக்கட்பேறு அடையும்படி செய்வான்! நீ என்ன நினைக்கிறாய்?..” என்று சிற்றன்னை மீண்டும் அவனைக் கேட்டாள்.

“நான் நினைப்பதற்கும் சொல்வதற்கும் இனி என்ன இருக்கிறது தாயே? வியாசர் திருவருளால் சந்திரவமிசம் வளர ஏதாவது வழி ஏற்படுமானால் அது நம்முடைய பெரும் பேறு ஆகும். தடையின்றித் தங்கள் கருத்துப்படியே செய்யுங்கள்” என்று வீட்டுமன் கூறினான்.

இதன் பின் மாலையில் கங்கைக் கரைக்கு வந்தபோது தான் மீண்டும் சிந்தனை அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அதையே தொடக்கத்தில் கண்டோம். உலகெங்கும் தம்முடைய அறிவு மனத்தைப் புனிதமான முறையில் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த மகாமுனிவர் அருள் புரிவார், என்ற நம்பிக்கையுடனே மாலைக் கடன்களை முடித்தான் வீட்டுமன். கடன்களை முடித்துக் கொண்டு அவன் அரண்மனைக்குப் புறப்படும்போது கங்கைக்கரை மெல்ல இருண்டு கொண்டிருந்தது. செல்லும் வழி மங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மனத்தில் மட்டும் நம்பிக்கைச் சுடர் சிறிது சிறிதாக ஒளி பெருக்கி வளர்ந்து கொண்டிருந்தது. பரிமளகந்தி வியாசரை அழைத்தாள். வியாசர் எல்லாப் பற்றுகளையும் துறந்த முனிவராயினும் பெற்றவள் அழைத்த அந்த அழைப்பை மறுக்கவோ, துறக்கவோ முடியவில்லை. அவர் பெற்றவளுக்கு முன் தோன்றினார். பரிமளகந்தி, சந்திரவமிசம் குலமுறையின்றித் தவிப்பதைக் கூறி அந்தத் தவிப்பு நீங்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு காலஞ்சென்ற விசித்திர வீரியனின் தேவியர்களாகிய