பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

அறத்தின் குரல்


“சகாதேவா! என் அலகிலா விளையாட்டைப் பற்றி நீ அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு மிகவும் நன்றி. பாரதப் போர் நடக்காமலிருக்க வேண்டுமானால் நீ தான் அதற்கு ஒரு வழி சொல்லேன்!” -குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சகாதேவனைக் கேட்டான் கண்ணன்.

“கர்ணனுக்கு அரசாட்சியை அளித்துவிட வேண்டும். அர்ச்சுனனைக் கொன்று திரெளபதியின் கூந்தலை அறுக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு உன்னைப் பிடித்து உன் கை கால்களில் விலங்கு மாட்டிக் கட்டிப் போட வேண்டும், இவ்வளவையும் செய்துவிட்டால் பாரதப் போர் நிகழாமல் தடுக்கலாம்” -என்று ஆவேசத்தோடு பேசினான் சகாதேவன்.

“சரியான யோசனைதான். இவையெல்லாவற்றையும் நீ ஒரு கால் செய்தாலும் செய்வாய். ஆனால் ஒரே ஒரு காரியத்தை மட்டும் உன்னால் கூடச் செய்ய முடியாதே! என்னைக் கட்டுவதற்கு உன்னால் முடியுமா? உனக்கு அகப்படும்படி அவ்வளவு சாமானியமானவனா நான்?” -இப்படிக் கூறிக் கொண்டே சாதாரணத்திற்கும் அப்பாற்பட்ட விசுவரூபத்தில் பல்லாயிரம் வடிவபேதங்களாக விரிந்து தோன்றி அவனை மருளச் செய்தான் கண்ணன். சகாதேவன் வியப்படையாமல் திகைப்படையாமல் சிரித்துக் கொண்டே நின்றான்.

“இப்போது என்னைக் கட்டு பார்க்கலாம்!” -ஆயிரமாயிரம் சிரிப்பு ஒலிகளுக்கு இடையே கம்பீரமும் இறுமாப்பும் கலந்து இழைந்த இந்தக் குரல் கேட்டது. பக்தி என்கின்ற கயிற்றால் தன் மனமாகிய தூணில் எண்ணமென்ற வலுக்கொண்டு கண்ணனை இறுக்கிக் கட்டினான் சகாதேவன். கண்ணன் கட்டுண்டான். எதை மீறினாலும் இந்த ஒரே ஒரு கட்டில் அவன் யாருக்கும் எளிதில் சிக்கித்தானே ஆக வேண்டும்!

“சகாதேவா! உன் சொற்படியே நீ என்னைக் கட்டிவிட்டாய். வெற்றி உனக்குத்தான். இப்போது என்னை விட்டுவிடு."