பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

331

 முதலில் கதிரவனைக் கூடி உன்னைப் பெற்றாள் குந்தி, விரிவான விவரங்கள் இன்னும் சிறிது காலத்தில் உனக்கே தெரியும். இப்போது நீ செய்யத்தக்கது உடனே துரியோதனாதியர்கள் கட்சியிலிருந்து விலகிப் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்தால் மூத்தவனாகிய உனக்கே அரசாட்சி கிடைக்கும். நீ இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டு விடாதே.” கண்ணன் கூறியனவற்றைக் கேட்டுக் கர்ணன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான். பின்பு கூறினான்:-

“கண்ணா! நன்றியை விட அரச பதவியும் உறவும் பெரியவை அல்ல. ‘கர்ணன் நன்றி கெட்டவன்’ என்ற பழிச்சொல் உலகத்தில் ஏற்பட்ட விட்டு விட மாட்டேன். பிறப்பை உணர்த்தியதற்கும் உணர்ந்து கொண்டதற்கும் நன்றி. ஆனால் உண்ட சோற்றுக்கு உழைக்க விரும்புகிறேன். துரோகம் நினைக்க விரும்பவில்லை. என்னை இதற்கு மேல் வற்புறுத்தாதீர்கள்.”

“சரி! நல்லது. நீ போய் வா..'’ கண்ணன் கர்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். கர்ணன் சென்றதும் அசுவத்தாமனை அழைத்து வரச் செய்தான். அசுவத்தாமனைத் தனியிடத்திற்கு அழைத்துக் கொண்டு போகாமல் அவைக்கு எதிரிலேயே ஓரிடத்தில் நின்று அவையோர்களுக்குக் கேட்காத மெல்லிய குரலில் அவனோடு உரையாடினான். “அசுவத்தாமா! இந்தத் துரியோதனாதியர்கள் செய்வது அநியாயம் என்பதை நீயே ஒப்புக் கொள்வாய். காட்டில் வசித்து வந்தபின் உரிய காலத்தில் இவர்கள் பாண்டவர்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட நாட்டை இப்போது ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்? இந்தக் கொடியவர்களுக்குப் போரில் நீ ஒத்துழைக்காதே! உன்னைப் படைத் தலைவனாகச் சொன்னால் ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விடு! கௌரவர்கள் பக்கத்தில் நீ படைத் தலைவனாக மறுத்து விட்டால் பின் பாண்டவர்களுக்குத் தான் வெற்றி” -இப்படிச் சொல்லிக் கொண்டே தந்திரமாகத் தம் கையிலிருந்த மோதிரத்தை வேண்டுமென்றே நழுவ